Published : 31 Mar 2023 06:19 PM
Last Updated : 31 Mar 2023 06:19 PM

செல்போனை வடிவமைத்து 50 ஆண்டுகள் நிறைவு | “அவர்கள் புத்தியை இழந்துவிட்டார்கள்” - மார்ட்டின் கூப்பர்

மார்ட்டின் கூப்பர் | கோப்புப்படம்

கடந்த 1973, ஏப்ரல் 3-ம் தேதி அன்று தான் வடிவமைத்த உலகின் முதல் கைபேசியை கொண்டு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டிருந்தார் அமெரிக்க பொறியாளர் மார்ட்டின் கூப்பர். இவர் செல்போனின் தந்தை என அறியப்படுகிறார். அதன் பிறகு சுமார் 10 ஆண்டு காலம் தனது குழுவினருடன் இணைந்து அதற்கு இறுதி வடிவம் கொடுத்தார். அது சந்தையிலும் விற்பனைக்கு வந்தது. அப்படி தொடங்கிய செல்போனின் பயணம் இன்றைய ஸ்மார்ட் டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது. அது பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.

‘ஹலோ’ சொல்வதில் ஆரம்பித்து குறுஞ்செய்தி அனுப்ப, வீடியோ வடிவிலான உரையாடல் மேற்கொள்ள, பணம் அனுப்ப மற்றும் பெற, ஆன்லைன் டிக்கெட் புக் செய்ய, படம் பார்க்க, புத்தகம் வாசிக்க, படம் பிடிக்க என மாயமானை போல ஸ்மார்ட்போன்களின் ஓட்டம் நீண்டு கொண்டே போகிறது. அதிலும் 5ஜி வரவால் இணைய இணைப்பின் வேகம் படு ஸ்பீடாக இருக்கிறது.

இந்தச் சூழலில் செல்போன் வடிவமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில் செல்போன் பயனர்களின் அடிக்‌ஷனை பார்த்து விரக்தி அடைந்துள்ளார் கூப்பர். இதை அண்மையில் அவர் பங்கேற்ற பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

“இப்போது மனிதனின் மற்றொரு நீட்சியாக மாறியுள்ளது செல்போன். அதனால் எளிதாக பல விஷயங்களை செய்ய முடியும். நாம் இப்போது அதன் தொடக்கப் புள்ளியில் தான் இருக்கிறோம். அது குறித்த புரிதலை இப்போதுதான் பெற தொடங்கி உள்ளோம். எதிர்வரும் நாட்களில் கல்வி மற்றும் சுகாதாரப் பிரிவில் சில புரட்சிகளை இந்த சாதனம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தப் புரட்சி எப்படி இருக்கும் என்றால் இப்போது ஸ்மார்ட் வாட்ச் நமது இதயத் துடிப்பை எப்படி மானிட்டர் செய்கிறதோ அது போல இருக்கும். முன்கூட்டியே சில நோய்கள் குறித்த அலர்டை போன்கள் கொடுக்கலாம். நான் ரொம்ப ஓவராக பில்ட்-அப் செய்து மிகைப்படுத்தி சொல்வது போல தெரியலாம். ஆனால், அடுத்த ஒன்று அல்லது இரண்டு தலைமுறைக்குள் இது நிச்சயம் நடக்கும்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டெலிகாம் துறையில் 1877 முதல் பெல் சிஸ்டம் எனும் நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர்தான் மொபைல் போன் குறித்து அந்த நிறுவன பொறியாளர்கள் பேச தொடங்கியுள்ளனர். அதன்படி கார்களில் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் மோட்டோரோலா மில்லியன் கணக்கான டாலர்களை செல்போன் வடிவமைப்பு பணிக்காக முதலீடு செய்துள்ளது. கூப்பர் அந்த நிறுவனத்துடன் அப்போது இருந்துள்ளார்.

1972-ன் இறுதியில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தும் வகையில் ஒரு போனை உருவாக்க அவர் விரும்பியுள்ளார். செமிகண்டக்டர்கள், டிரான்சிஸ்டர்கள், ஃபில்டர்கள் மற்றும் ஆண்டெனாக்கள் போன்றவற்றை நான்கு அறிந்த நிபுனர்களுடன் மூன்று மாத காலம் ஓயாமல் பணி செய்துள்ளார். அதன் மூலம் செல்போனை வடிவமைத்துள்ளார். அப்போது வடிவமைக்கப்பட்ட போன் சுமார் 1 கிலோ எடையை கொண்டிருந்துள்ளது. 25 நிமிடங்கள் மட்டுமே பேட்டரி லைப் கொண்ட அந்த போனை பிடித்து பேசுவது கடினம் என அவரே தெரிவித்துள்ளார். மேலும், முதல் முறையாக சந்தையில் விற்பனை தொடங்கிய போது அதன் விலை சுமார் 5,000 டாலர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இன்றைய உலகின் பெரும்பாலான மக்கள் மொபைல் போனை பயன்படுத்தி வருகிறார்கள். அதன் வழியே எங்கள் கனவின் ஒரு பகுதி நிஜமாகி உள்ளது. உலகில் தொலைக்காட்சி அறிமுகமான போது வெவ்வேறு விதமான பேச்சுகள் இருந்தன. ஆனால், டிவி பார்ப்பதில் ஏதோ ஆதாயம் உள்ளது என அறிந்து கொள்ளப்பட்டது.

அதுபோல செல்போன் பயன்பாட்டில் இப்போது நாம் புத்தியை இழந்து நிற்கும் கட்டத்தில் இருக்கிறோம். இது நீண்ட நாட்கள் நீடிக்காது. ஒவ்வொரு தலைமுறையும் ஸ்மார்ட் ஆகும். அதன் வழியே செல்போனை எப்படி திறம்பட பயன்படுத்துவது என அறிந்து கொள்வார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x