Published : 21 Dec 2022 05:59 AM
Last Updated : 21 Dec 2022 05:59 AM

ஃபைல்ஸ் செயலியுடன் டிஜிலாக்கர் இணைக்கப்படும்: கூகுள் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ஆவணங்களை இணையத்தில் சேமித்து வைக்க 'டிஜிலாக்கர்' வசதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. கிளவுட் அடிப்படையில் இயங்கும் டிஜிலாக்கர், ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை சேமிக்கவும், பகிரவும் பாதுகாப்பான தளமாக விளங்குகிறது.

இந்நிலையில், டிஜிலாக்கர், கூகுள் ஃபைல்ஸ் செயலியுடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி, அரசாங்கத்தால் சரிபார்க்கப்பட்ட ஆவணங்களை பயனாளர்கள் இந்த ஃபைல்ஸ் செயலியின் மூலமாக அணுகமுடியும்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய மின்னணு நிர்வாகப் பிரிவுடன் இதற்காக இணைந்து செயல்படவுள்ளதாக 'இந்தியாவுக்காக கூகுள் 2022' என்ற நிகழ்ச்சியில் கூகுள் அறிவித்துள்ளது.

கூகுளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு பிரிவின் துணைத் தலைவர் ராயல் ஹேன்சன் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் டிஜிட்டல் பயனாளர்கள் மற்றும் வணிக செயல்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வலைதள ஊடுருவல்களும் அதிகரித்து வருகின்றன. சைபர் பாதுகாப்பை பகுப்பாய்வதிலும் அதனை மேம்படுத்துவதிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் திறம்பட செயல்பட்டு கடினமான சவால்களை சமாளிக்க உதவும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x