Published : 04 Oct 2022 12:04 PM
Last Updated : 04 Oct 2022 12:04 PM

அக்.4 | விண்வெளி ஆராய்ச்சியில் உலகம் முதல்படி எடுத்து வைத்த மகத்தான நாள்: அப்படி என்ன சிறப்பு?

கோப்புப் படம்

முன்பெல்லாம் குழந்தைகளுக்கு வானில் இருக்கும் நிலாவை காட்டி சோறு ஊட்டுவார்கள். ஆனால் இன்று செல்போனில் நிலவை ஸூம் செய்து குழந்தைகள் பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் விஞ்ஞானிகளின் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சியும், ஆய்வும், அதற்கு கிடைத்த வெற்றியும்தான். அவர்களது ஆய்வில் இதே நாளில் சரியாக 65 ஆண்டுகளுக்கு முன்னர் முக்கியமான வெற்றி கிடைத்தது. அந்த வெற்றி பல வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமைந்தது.

அதன் மீதுதான் உலக நாடுகள் விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த இன்று போட்டி போட்டு வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா என பல நாடுகள் அந்த ரேஸில் உள்ளன.

19-ம் நூற்றாண்டின் பிற்பாதியில்தான் விண்வெளி சார்ந்த பயணம் குறித்து முன்மொழியப்பட்டது. இருந்தாலும் அதற்கு முன்னர் தொலைநோக்கி மூலம் வான்வெளியை ஆராயும் பணியை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து படிப்படியாக அந்த முன்னேற்றம் நடந்துள்ளது.

65 ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி என்ன நடந்தது?- அந்த நாள் சோவியத் யூனியனின் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு மிகப்பெரிய வெற்றிகரமான நாள். ‘ஸ்புட்னிக் 1’ எனும் செயற்கைக்கோளை அன்றதான் சோவியத் விண்ணில் ஏவியது. பூமியிலிருந்து சுமார் 230 கிலோமீட்டர் தூரத்தில் அது நிலைநிறுத்தப்பட்டது. அதனை பூமியில் இருந்தபடி ஆய்வாளர்கள் கண்காணித்து, அது கொடுத்த தரவுகளின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர். வளிமண்டலத்தின் மேற்பகுதியிலிருந்து இந்த செயற்கைக்கோள் கொடுத்த தரவுகளை அவர்கள் ஆராய்ந்தனர். அந்த செயற்கைக்கோள் நாள் கணக்கில் மட்டுமே பணி செய்தது. தொடர்ந்து ‘ஸ்புட்னிக் 2’ மூலம் விண்ணுக்கு நாயை அனுப்பியது சோவியத்.

சோவியத் யூனியன் vs அமெரிக்கா: 1960 வாக்கில் சோவியத் யூனியனும் அமெரிக்காவுமே விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளில் அதிகளவு மும்முரம் காட்டின. இரு நாடுகளுக்கு இடையே பனிப்போர் இருந்ததும் இதற்கு ஒரு காரணம். 1959 வாக்கில் அமெரிக்காவின் எக்ஸ்புளோரர் விண்ணிலிருந்து பூமியை படம் பிடித்து அனுப்பியது. இப்படியாக இருதரப்பு முயற்சிகளும் வெற்றியையும், தோல்வியையும் கலந்து சந்தித்தன. அந்த சூழலில்தான் மனிதனை விண்ணுக்கு அனுப்பி அடுத்த மைல்கல்லை எட்டியது சோவியத். விண்ணுக்கு சென்று பூமியை வலம் வந்த முதல் மனிதர் ஆனார் யூரி ககாரின். 1963 வாக்கில் விண்ணுக்கு முதல் முறையாக பெண்ணை அனுப்பியது சோவியத்.

அப்போதுதான் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது அமெரிக்கா. 1969, ஜூலை 21-ம் தேதி விண்வெளி ஆராய்ச்சியில் உலகம் அடுத்த படியை எட்டியது. அன்றைய தினம் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் தரையிறங்கினார். தொடர்ந்து பஸ் அல்ட்ரின் நிலவில் இறங்கினார். இருவரும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நிலவில் நேரம் செலவிட்டனர். அதோடு 47.5 பவுண்ட் அளவில் நிலவின் மாதிரிகளை அவர்கள் இருவரும் சேகரித்து வந்தனர்.

தொடர்ந்து உலக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கோள்களை ஆராய தொடங்கினர். கால ஓட்டத்தில் அமெரிக்கா, சோவியத் மட்டுமல்லாது சீனா, ஐரோப்பிய நாடுகள், கனடா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளும் இணைந்தன.

கடந்த 2008 வாக்கில் இந்தியாவின் இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்ட சந்திராயன் 1, நிலவில் நீர் ஆதாரம் இருப்பதை கண்டறிந்தது. இதற்கு நாசாவின் எம்3 உதவி இருந்தது.

கடந்த 2020 வாக்கில் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி இருந்தது. அதுவரை பல்வேறு நாடுகளின் அரசுகள் தான் இந்த முயற்சியை மேற்கொண்டு வந்தன.

விண்வெளி சுற்றுலா!- பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்குச் சென்று வர முடியும் என்ற நிலையை சில தனியார் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. விண்வெளிக்கு உலா சென்று வர உதவும் டூர் ஆப்பிரேட்டர்கள் என்றும் இந்த நிறுவனங்களைச் சொல்லலாம். விர்ஜின் காலக்டிக், ப்ளூ ஆரிஜின் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்கள் விண்வெளிக்கு சுற்றுலா சென்று வர உதவி வருகின்றன. இப்போதைக்கு பணம் படைத்த செல்வந்தர்கள் மட்டுமே சென்று வரும் சுற்றுலாவாக உள்ளது விண்வெளி சுற்றுலா. வரும் நாட்களில் அதற்கான கட்டணங்கள் மேலும் குறையலாம். சாமானியரும் மைக்ரோ கிராவிட்டியில் மிதக்கலாம்.

இதில் ஒருபடி மேலே சென்றுள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் முயற்சிகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சாட்டிலைட் மூலம் இணையம், தொலைக்காட்சி அலைவரிசை என பலவற்றை சாத்தியப்படுத்தி உள்ளது விண்வெளி சார்ந்த அறிவியலும், ஆராய்ச்சியும்.

அந்த வகையில் அக்டோபர் 4 விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கிய நாளாக அமைந்துள்ளது. 1999 டிசம்பர் வாக்கில் ஐநா கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் அக்டோபர் 4 முதல் 10 வரையில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மூலம் மனித குலத்தின் வாழ்வை மேம்படுத்த உதவும் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை கொண்டாடும் விதமாக இது அமைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x