மங்கள்யான் விண்கலத்தின் பயணம் முடிவுக்கு வந்தது

(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கடந்த 2013 நவம்பர் 5-ம் தேதி செவ்வாய் கிரகத்துக்கு பிஎஸ்எல்வி-சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலத்தை அனுப்பியது. முதல் முறையிலேயே இந்த திட்டம் வெற்றி பெற்றது. இதன் மூலம் வேற்று கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. 2014-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்த மங்கள்யான், அதனைச் சுற்றி வந்தது. இது 6 மாதங்களுக்கு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது. எனினும், இந்த விண்கலம் 8 ஆண்டுகள் 8 நாட்கள் செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து பல அரிய படங்களை அனுப்பியது.

இந்நிலையில், மங்கள்யான் உடனான தொடர்பு நேற்று துண்டிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நீண்ட நேரம் கிரகணம் ஏற்பட்டதால் எரிபொருள் தீர்ந்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் விண்கலத்தின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் எனத் தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in