Published : 02 Sep 2022 01:10 AM
Last Updated : 02 Sep 2022 01:10 AM

கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்கும் “செர்வாவாக்” தடுப்பூசி: இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கம்

புதுடெல்லி: கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கான “செர்வாவாக்” தடுப்பூசி இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், "கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இந்தியாவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதில், இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நோய் பெரிதும் தவிர்க்கக் கூடியதாக இருந்தபோதும், இந்த புற்றுநோயால் உலகில் ஏற்படும் மரணங்களில் சுமார் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.25 லட்சம் இந்தியப் பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இவர்களில் 75,000 பேர் உயிரிழக்கின்றனர்.

இந்த நிலையில் கர்ப்பப்பைவாய் புற்றுநோயைத் தடுப்பதற்கான "செர்வாவாக்" தடுப்பூசி இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கிடைக்கக் கூடிய, குறைந்த செலவிலான இந்த தடுப்பூசி அறிவிக்கப்படும் நாள் உயிரி தொழில்நுட்பத்துறைக்கும், உயிரி தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சிலுக்கும் முக்கியமான நாளாகும். தற்சார்பு இந்தியா என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்டத்திற்கு மிகவும் நெருக்கமாக இந்தியாவை கொண்டுவருவதாக இது உள்ளது.

மாபெரும் சவால்கள் இந்தியா திட்டத்தில் பங்கேற்றுள்ள சீரம் இந்தியா நிறுவனத்தின் ஆதரவுடன் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் உயிரி தொழில்நுட்பத்துறையும் உயிரி தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சிலும் இணைந்ததன் விளைவாக செர்வாவாக் தடுப்பூசி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து, இந்தத் தடுப்பூசிக்கு அறிவியல்பூர்வமான நடைமுறைகள், நிறைவடைந்திருப்பதாக புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் சி. பூனாவாலா மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் அமைச்சர் அறிவித்தார்.

அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே கூறுகையில், மனிதகுலத்தின் நன்மைக்காக அனைத்துத் தடைகளையும் தகர்த்து தடுப்பூசி மற்றும் மருந்து தயாரிப்பில் இந்தியா முன்னிலையில் இருக்கும் என்றும் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் என் கலைசெல்வி, இந்த தடுப்பூசி இந்திய பெண்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் சி பூனாவாலா பேசுகையில், "இந்தியாவில், தடுப்பூசிகளும் மருந்துகள் தயாரிப்பதில் தனியார் மற்றும் அரசு துறைகளுக்கு இடையே கூடுதல் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் உயிரி அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கண்ணோட்டத்தை நான் ஆதரிக்கிறேன்" என்றார்.

நிகழ்ச்சியில், கர்ப்பப்பை புற்றுநோயை எதிர்த்து தைரியமுடன் போராடி வெற்றி பெற்ற பிரபல திரைப்பட நடிகை மனிஷா கொய்ராலா, இணையம் வழியாக கலந்துகொண்டு, இந்த மைல்கல்லை எட்டியுள்ள அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு குறிப்பாக உயிரி தொழில்நுட்ப துறைக்கு தனது நன்றியினைத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x