Published : 22 Aug 2022 07:35 AM
Last Updated : 22 Aug 2022 07:35 AM

உடனடி கடன் தருவதாக கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்த 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகள் முடக்கம்

புதுடெல்லி: குறைந்த வட்டிக்கு உடனடி கடன் தருவதாக கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்த கும்பலை கண்டுபிடித்த டெல்லி போலீஸார், அவர்கள் பயன்படுத்திய 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகளை முடக்கியுள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த ஒரு கும்பல் மிக குறைந்த வட்டிக்கு, உடனடியாக கடன் தருவதாகவும், 90 நாட்களுக்கு வட்டியில்லை என இணையதளங்களில் விளம்பரம் செய்து டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் நாட்டின் இதர மாநிலங்களில் மக்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளது.

இந்த கடன் வழங்குவதற்காக அந்த கும்பல் 100-க்கும் மேற்பட்ட செல்போன் செயலிகளை பயன்படுத்தியுள்ளது. இந்த செயலிகள் எல்லாம் சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள சர்வர்கள் மூலம் இயங்கியுள்ளன.

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை (கேஓய்சி) பெற்றதும், சில நிமிடங்களில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் கடன் தொகை செலுத்தப்பட்டுள்ளது. குறைந்த வட்டிக்கு கடன் என கூறியவர்கள், கடன் வழங்கியபின், நாள் கணக்கில் வட்டியை கணக்கிட்டு கடன் பெற்றவர்களிடம் அதிக தொகையை வசூலித்துள்ளனர். ரூ.5,000 முதல் ரூ.10,000 கடன் பெற்றவர்கள் கூட ரூ.1 லட்சம் அளவுக்கு பணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்னர்.

இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போதே, அந்த செயலிகள் வாடிக்கையாளர் செல்போனில் உள்ள தொடர்பு எண்கள், போட்டோ கேலரி மற்றும் இதர தனிப்பட்ட விவரங்களை பெற அனுமதி கேட்கும். கடன் பெற விரும்புவர் அனுமதி அளித்தவுடன், அவரது செல்போனில் உள்ள அனைத்து தனிப்பட்ட விவரங்களும் சீன சர்வர்களுக்கு சென்று விடுகின்றன.

சீனாவைச் சேர்ந்த ஜிக்சியா ஜாங் மற்றும் லூ ராங் ஆகியோர் இந்த தொழிலை கார்பரேட் நிறுவனம் போல் நடத்தியுள்ளனர். இவர்களின் கீழ் நிதி குழு, தொழில்நுட்ப குழு, பணம் வசூலிப்பு குழு ஆகியவை இயங்கியுள்ளது.

கூடுதல் வட்டி பணத்தை கடன் பெற்றவர் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், ஒரு குழு கடன் பெற்றவர்களையும், அவரது உறவினர்கள், நண்பர்களுக்கும் டெலி காலர் பிரிவினர் போன் செய்து கடனை திருப்பிச் செலுத்த வற்புறுத்தியுள்ளனர். அப்படியும் பணம் செலுத்தவில்லையென்றால், கடன் பெற்றவரின் செல்போனில் இருந்த போட்டோ கேலரியில் இருந்த படங்களை ஆபாச படமாக மாற்றி அதை வாடிக்கையாளருக்கு அனுப்பி பணத்தை திருப்பி செலுத்தும்படி கட்டாயப்படுத்தியுள்ளது.

இது குறித்து டெல்லி போலீஸாருக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதையடுத்து டெல்லி போலீஸார் 2 மாதத்துக்கு மேல் புலன் விசாரணை நடத்தி இந்த கும்பலை கண்டுபிடித்துள்ளது.

இது குறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் கேபிஎஸ் மல்கோத்ரா கூறியதாவது. மக்களுக்கு கடன் வழங்கி நிதி மோசடியில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட சீன செயலிகளை கண்டுபிடித்து முடக்கியுள்ளோம். இது தொடர்பாக 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிதி மோசடியில் சீன நிறுவனங்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளன. இந்த கும்பலிடம் இருந்து 51 செல்போன்கள், 25 ஹார்டு டிஸ்க்குகள், ஏராளமான தரவுகளுடன் 9 லேப்-டாப்கள், 19 டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், 3 கார்கள், ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.

இந்த கடன் மோசடியின் பின்னணியில் செயல்பட்ட சீன கும்பலின் பாஸ்போர்ட் விவரங்கள் எங்களிடம் உள்ளது. இதை வைத்து அவர்களை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x