Published : 30 Jun 2022 04:11 AM
Last Updated : 30 Jun 2022 04:11 AM

சிங்கப்பூரின் செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை: சிங்கப்பூரின் ‘டிஎஸ்-இஓ’ உட்பட 3 செயற்கைக்கோள்கள், பிஎஸ்எல்வி சி-53 ராக் கெட் மூலம் இன்று (ஜூன் 30) மாலை விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உட்பட 3 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

முதன்மை செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ, 365 கிலோ எடை கொண்டது. இது வண்ணப் புகைப்படம் எடுக்கும் திறன் உடையது. 155 கிலோ எடை கொண்ட நியூசர் செயற்கைக்கோள், சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கும். இது இரவு, பகல் உட்பட அனைத்து பருவநிலைகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுத்து வழங்கும்.இவற்றுடன் கல்விசார் பணிக்காக சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலை. மாணவர்கள் வடிவமைத்த ‘ஸ்கூப்-1’என்ற செயற்கைக்கோளும் (2.8 கிலோ) விண்ணில் ஏவப்பட உள்ளது.

கரோனா பரவல் குறைந்துள்ளதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு ராக்கெட் ஏவுதலை பார்வையிட பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x