Published : 02 Apr 2022 12:30 PM
Last Updated : 02 Apr 2022 12:30 PM

இந்தியாவில் பிப்ரவரியில் 10 லட்சத்திற்கும் மேலான வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை: காரணம் என்ன? 

ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் லட்சோப லட்ச வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை விதித்து வருகிறது இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்திலும் இதே போல லட்ச கணக்கிலான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளதாக தெரிகிறது.

இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் காரணமாக வாட்ஸ்அப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. புதிய விதிகளின்படி வாட்ஸ்அப் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என்பதை விவரிக்கும் வகையில் ஒன்பதாவது முறையாக இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி பிப்ரவரி 1 முதல் 28 வரையில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதால். சரியாக சுமார் 1.4 மில்லியன் கணக்குகள் என சொல்லப்பட்டுள்ளது.

புதிய சட்ட விதிகளுக்கு புறம்பாக போலி செய்திகளை அனுப்பியது, மற்ற பயனர்களுக்கு தொல்லை கொடுப்பது மற்றும் இன்னும் பிற காரணங்களுக்காக அந்த கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்-அப் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பயனர்கள் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கொடுத்த புகார்கள் அடிப்படையிலும், விதிகளை மீறியவர்கள் மீது வாட்ஸ்-அப் நிறுவனம் தானாக முன்வந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்காகவே வாட்ஸ்அப் தளம் 'Abuse Detection Technology' என்ற தொழில்நுட்பத்தை கட்டமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கள் தளத்தில் பகிரப்படும் செய்திகள் அனைத்தும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டவை என்பதை வாட்ஸ்-அப் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளது. அதாவது செய்தியை அனுப்பும் நபர் மற்றும் பெறுபவரை தவிர வேறு யாரும் அந்த செய்தியை படிக்க முடியாது என வாட்ஸ்-அப் சொல்லியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x