Last Updated : 18 Jul, 2020 08:34 PM

 

Published : 18 Jul 2020 08:34 PM
Last Updated : 18 Jul 2020 08:34 PM

உலக அளவில் பொருளாதார நெருக்கடி; 25 கோடி பேர் வேலையிழப்பார்கள்: மைக்ரோசாப்ஃட் மதிப்பீடு

சான் பிரான்சிஸ்கோ

கோவிட்-19 தொற்று பாதிப்பால் உலக அளவில் பொருளாதாரம் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், அதனால் இந்த வருடம் 25 கோடி மக்கள் வரை வேலையிழப்பார்கள் என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் கூறியுள்ளார்.

கோவிட்-19 தொற்று காரணமாக உலக மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு நிலவி வருகிறது. வீட்டிலிருந்தே வேலை செய்யக்கூடிய வகையில் இருக்கும் துறைகளில் கூட வேலையிழப்பு, பணி நீக்கம், சம்பளப் பிடிப்பு ஆகியவை வழக்கமாகி வருகின்றன. இந்தப் பிரச்சினை இன்னும் தீவிரமாகும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் கூறியுள்ளார். வேலைகள் கிடைக்க அல்லது இருக்கும் வேலையில் நிலைத்திருக்கக் கூட மக்கள் புதிய திறன்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று பிராட் ஸ்மித் கூறியுள்ளார்.

"25 கோடி பேர் வேலையிழப்பார்கள் என்பது அதிர்ச்சிகரமான ஒரு விகிதம். கரோனா தொற்றுக்கு எல்லை கிடையாது. அமெரிக்காவில் மட்டுமே 3.5 சதவீதத்திலிருந்து 15.8 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை உயரவிருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 2.1 கோடி பேர் வேலையிழக்கவுள்ளார்கள். இதேபோன்ற சவால்கள் இன்னும் பல நாடுகளுக்கு உள்ளன" என்று ஸ்மித் கூறியுள்ளார்.

உலக அளவில், இந்த வருடக் கடைசிக்குள், 2.5 கோடி மக்களின் டிஜிட்டல் தொடர்பான திறன் மேம்பாட்டுக்காக மைக்ரோசாப்ஃட் பயிற்சி தரும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இணைய ஏற்றத்தாழ்வு இருக்கும் உலகில் நாம் வாழ்கிறோம், எனவே அதைச் சரி செய்யவில்லையென்றால் அதோடு சேர்த்து இன்னும் பல ஏற்றத்தாழ்வுகளை நாம் அதிகப்படுத்துவோம், அதற்காகவே இந்தப் பயிற்சி முன்னெடுப்பு என்று ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஐந்து வருடங்களில் 14.9 கோடி பேருக்கு தொழில்நுட்பம் தொடர்பான வேலைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று மைக்ரோசாஃப்ட் மதிப்பிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x