

ஊரடங்கு சமயத்தில் அனைவராலும் எளிதில் ஆரம்பிக்கக்கூடிய சுயதொழில் என்பது ஒரு யூடியூப் சேனல் என்றாகிவிட்டது.
யூடியூபில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதெல்லாம் உண்மையென்றாலும் ஒருவர், யூடியூபில் ஒரு ரூபாய் சம்பாதிக்க ஆரம்பிக்க பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஏனென்றால் வருவாய்க்கான யூடியூபின் விதிகள் அப்படி.
அதையும் மீறி இந்தியாவிலிருக்கும் பல்வேறு தனி நபர் யூடியூப் சேனல்களும், குழு சேனல்களும் ஒரு பக்கம் பணம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. யூடியூப் மூலம் பணக்காரர்களாகவும், பிரபலங்களாகவும் மாறியவர்களும் இருக்கின்றனர். அப்படி யூடியூபில் பிரபலமான ஒருவர் கவுரவ் சௌத்ரி.
இவர் தொழில்நுட்பம் மற்றும் மொபைல் பற்றிய விமர்சனங்களை தனது யூடியூப் சேனலில் உடனுக்குடன் வெளியிடுபவர். குறிப்பாக புதிய மொபைல்கள் வந்த அன்றே அதற்கான விமர்சனங்கள் இவரது சேனலில் வரும். கிட்டத்தட்ட 35 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் இவரது சேனலின் மூலம் மாதம் ரூ.20 லட்சம் வரை கவுரவ் சம்பாதித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
தற்போது துபாயில் வசித்து வரும் கவுரவ் தனது வருமானத்தை வைத்து, ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பரக் காரை வாங்கியுள்ளது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதுவும் தனக்கான மாறுதல்களை நிறுவனத்திடம் கேட்டுப் பெற்றுள்ளார்.
சூர்யவம்சம்' சரத்குமார் போல, 'அண்ணாமலை' ரஜினிகாந்த் போல ஒரே பாடலில் பெரிய பணக்காரனாக வேண்டுமென்ற ஆசையில் இருக்கும் பல இளைஞர்களை இந்தச் செய்தி இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது.