Last Updated : 08 Jun, 2020 06:33 PM

 

Published : 08 Jun 2020 06:33 PM
Last Updated : 08 Jun 2020 06:33 PM

ஜீ 5 ஸ்ட்ரீமிங் சேவையின் சந்தாதாரர்கள் பற்றிய தகவல்கள் திருடப்பட்டதா? - தொழில்நுட்பப் பிரிவு தலைவர் விளக்கம்

ஜீ 5 ஸ்ட்ரீமிங் சேவையின் சந்தாதாரர்கள் பற்றிய தகவல்கள் ஒரு ஹேக்கரால் திருடப்பட்டன என்ற செய்தியை அந்நிறுவனம் மறுத்துள்ளது. மேலும் இந்த விஷயம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஜான் விக் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட கொரியாவைச் சேர்ந்த ஒரு ஹேக்கர், ஜீ 5 ஸ்ட்ரீமிங் சேவையிலிருந்து 150 ஜிபி அளவிலான பயனர்களின் தரவுகளைத் திருடியுள்ளதாகவும், மேலும் ஜீ 5 இணையதளத்தை இயங்க வைக்கும் சோர்ஸ் கோட் எனப்படும் கணினிக்கான குறிமுறையாக்கத்தைத் திருடியுள்ளதாகவும் இணையப் பாதுகாப்பு செய்திகளைத் தரும் குயுக் சைபர் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டது. மேலும் தான் திருடிய தகவல்களை விற்பனைக்கு வைக்கவிருப்பதாகவும் இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜீ 5 தரப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் துஷார் வோஹ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இதுகுறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கடந்த சில வருடங்களாக ஓடிடி துறையும் சரி, அதன் மீதான ஹேக்கர்களின் ஆர்வமும் சரி பெரிய அளவு வளர்ந்துள்ளது. குறிப்பாக கோவிட்-19 தொற்றுப் பிரச்சினைக்குப் பிறகு, தரவுகளைத் திருடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது கவன ஈர்ப்புக்காக செய்யப்படும் சுயநலமான செயல்.

கட்டணம் செலுத்துதலையொட்டிய பயனர்கள் தொடர்பான அதி முக்கியத் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. ஜீ 5 தளத்தின் கட்டமைப்பு நவீனமானது, வலிமையானது. நாங்கள் தொடர்ந்து பாதுகாப்பான தொழில்நுட்பத்துக்காக அதிகம் முதலீடு செய்யவிருக்கிறோம். பயனர்களின் தரவுகளைப் பாதுகாக்க முன்னணி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளோம். அவை என்றும் திருடப்பட முடியாது என்பதி உறுதி செய்துள்ளோம்".

இவ்வாறு ஜீ 5 தரப்பின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜீ 5 ஸ்ட்ரீமிங் சேவைக்கு உலக அளவில் 15 கோடி சந்தாதாரர்கள் இருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x