Published : 04 Oct 2019 12:02 PM
Last Updated : 04 Oct 2019 12:02 PM

ஃபேஸ்புக்குடன் கைகோத்த தமிழக அரசு: ரத்த தானத்தை ஊக்குவிக்க புதிய முயற்சி

ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் தமிழக அரசு கைகோத்துள்ளது.

அதிக அளவில் ரத்தம் கொடுத்து, தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. எனினும் ரத்தம் கொடுப்பவர்களுக்கும் ரத்தம் தேவைப்படுவோருக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஃபேஸ்புக் நிறுவனத்துடன் தமிழக அரசு கைகோத்துள்ளது.

இதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளும், தன்னார்வ ரத்தக் கொடையாளர்களை அணுக ஃபேஸ்புக்கை ஓர் ஊடகமாகப் பயன்படுத்த வேண்டும். இதற்காக அனைத்து ரத்த வங்கி ஊழியர்களுக்கும் பிரத்யேகப் பயிற்சிகள் வழங்கப்படும். இதன்மூலம் ஃபேஸ்புக்கின் ரத்த தான வசதியை அவர்கள் எளிதில் பயன்படுத்த முடியும். ரத்தக் கொடையாளர்களை ஃபேஸ்புக் வழியே, ரத்த வங்கிகளால் அணுக முடியும்.

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு, ரத்த தானம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் அருகில் ரத்தம் தேவைப்படும் பயனாளிகளின் விவரங்களைப் பட்டியலிடும் முறை அறிமுகமானது. இதன்மூலம் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், அவசரக் காலத்தில் தேவைப்படும் அரிய வகை ரத்தத்தையும் எளிதில் பெற முடிந்தது.

ஃபேஸ்புக்கில் கடந்த 2017-ல், இந்தியா, வங்கதேசம், பிரேசில், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இம்முறை அறிமுகமானது. அதில் 3.5 கோடி பயனர்கள் ஆர்வத்துடன் பதிவு செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x