

மனித உணர்வுகள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவதுதான் இயல்பானது. அப்படியான உணர்வுகளை செயற்கையாக உருவாக்கவும் வந்துவிட்டது எலெக்ட்ரானிக் கருவி.
நெற்றியில் ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு சிறிதாக உள்ள இந்த கருவியின், இன்னொரு முனை பின்னங்கழுத்தில் தண்டுவடமும் தலைப்பகுதியும் இணையும் இடத்தில் ஒட்டிகொள்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போனிலிருந்து செயலி மூலம் இந்த கருவியை இயக்க வேண்டும். பரபரப்பாக வேலை செய்து களைத்துப் போகிறோம், அந்த நேரத்தில் சுறுசுறுப்பாக இருப்பதாக உணர வேண்டும் என்றால் செல்போனிலிருந்து கருவியை இயக்க வேண்டும். மூளையின் செல்களில் சுறுசுறுப்புக்கான செயல்பாடுகளை இந்த கருவி தூண்டும். இதன்மூலம் அதே உற்சாகத்தோடு இருக்கலாம்.
அதேபோல ஓய்வை உணர வேண்டும் என்றாலும் செயலியை இயக்கி மூளையின் செயல்களை அமைதியான நிலைக்குக் கொண்டு செல்லலாம். 30 விநாடிகளில் மூளையின் செயல்பாடுகளை தூண்டுகிறது இந்த கருவி. ரசாயனம் மற்றும் மருந்துகள் உட்கொள்ள தேவையில்லை. மருத்துவ ரீதியாக பயன்படும் என்றும் கூறியுள்ளது இதை தயாரித்துள்ள நிறுவனம்.
குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகோ அல்லது இந்த கருவியை அகற்றிய பிறகோ மீண்டும் பழைய மனநிலைக்கு புத்துணர்ச்சியோடு திரும்பலாம்.