Published : 21 Nov 2013 02:17 PM
Last Updated : 21 Nov 2013 02:17 PM

ஃபேஸ்புக் பயன்படுத்துவதில் முதலிடத்தை நோக்கி இந்தியா!

இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நடப்பு ஆண்டு 37.4 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் இது முதலிடமாகும்.

வரும் 2016 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அடிப்படையில், இந்தியா முதலிடம் வகிக்கும் என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

இ-மார்க்கெட்டர் எனும் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது. சமூக இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் 37.4 சதவீதமும், இந்தோனேசியாவில் 28.7 சதவீதமும், மெக்ஸிகோவில் 21.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இந்த மூன்று நாடுகளிலும் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நடப்பு ஆண்டு 100 கோடியை எட்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 14.68 கோடி பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர். உலக அளவில் இது முதலிடமாகும். இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. இருப்பினும் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் இதே அளவில் தொடர்ந்தால் இந்தியா 2016 ஆம் ஆண்டு முதலிடத்தைப் பிடிக்கும்.

சீனாவில் ஃபேஸ்புக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டு மாதம்தோறும் குறைந்தது 161 கோடி பேர் ஃபேஸ்புக் கணக்கில் உள்நுழைகின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x