Published : 08 Aug 2016 01:27 PM
Last Updated : 08 Aug 2016 01:27 PM

ஏழை நோயாளிகளுக்கு உதவும் ஆன்லைன் வைரல் போக்கு!

பணத்தை வெறுமனே வைத்திருப்பதால் ஒரு பயனும் இல்லை, அது மற்றவர்களுக்குப் பயன்பட்டால்தான் அது பணம். அந்த வகையில் தொழில்நுட்பத்தின் உதவியோடு பணத்தை வசூலித்து, நோயாளிகளுக்கு சிகிச்சையாக வழங்கி வருகிறது கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவர் குழு. சமூக வலைதளங்களில் தகவலை வைரலாகப் பரப்பும் போக்குதான் இதற்கு உறுதுணைபுரிகிறது.

நிதியுதவி செய்யக்கூடிய தன்னார்வலர்களால் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது குழந்தை மற்றும் முதியோர் பராமரிப்பு அறக்கட்டளை. இதன் உறுப்பினர்கள் அனைவரும் ஹுபள்ளி, கலபுராகி, பெங்கரூவில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் முன்னாள் மாணவர்கள். சுமார் 100 பேரைக் கொண்ட இக்குழு மூலம் சிகிச்சைக்கு தேவையான பணம் வசூலிக்கப்படுகிறது.

இவர்கள் வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்களின் உதவியோடு பணத்தைச் சேகரித்து வருகின்றனர். இந்த மருத்துவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 50 நோயாளிகளுக்கு உதவி செய்திருக்கின்றனர். நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் சுமார் 1 லட்சம் ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

10 வயதுச் சிறுவனான நிங்கையா ஏழைத் தொழிலாளி ஒருவரின் மகன். திறந்த வெளியில் படுத்து தூங்கியதால் நிங்கையாவைப் பாம்பு கடித்தது. அதனால் அவருக்கு அதிக செலவுள்ள சிகிச்சை எடுக்க நேர்ந்தது. இதே போல சிர்சியைச் சேர்ந்த ஏழை விவசாயத் தொழிலாளியின் குழந்தை கெளரம்மா. கொடுக்கப்பட்ட தேதிக்கு இரண்டு மாதங்கள் முன்னால் பிறந்ததால் 75 நாட்களுக்கு இன்குபேட்டரிலேயே இருக்க நேர்ந்திருக்கிறது. இந்த அறக்கட்டளையே இருவருக்கும் சிகிச்சை அளிக்க நிதியுதவி செய்திருக்கிறது.

அறக்கட்டளையின் கிளைகள் அமெரிக்காவில் இருந்து தென் கியூபா வரை வியாபித்திருக்கின்றன. இந்தக் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் தேவையிருக்கும் நோயாளியைப் பற்றிய தகவல்களையும், சிகிச்சைக்குத் தேவைப்படும் பணத்தையும் கேட்டு குழுவில் பதிவிடுகின்றனர். இது எல்லா உறுப்பினர்களுக்கும் பகிரப்பட்டு பணம் திரட்டப்படுகிறது. இந்தக்குழு அல்லாத உறுப்பினர்களும் நோயாளி பற்றிய தகவல்களைக் கொடுக்கலாம்.

இதுகுறித்துப் பேசிய அக்குழுவின் உறுப்பினரும், கர்நாடக மாநிலம் பிடாரைச் சேர்ந்த எலும்பியல் சிகிச்சை நிபுணருமான ராஜசேகர், ''அரட்டைக்காக மட்டுமே ஏராளமான மக்கள் வாட்ஸப்பையும், ஃபேஸ்புக்கையும் பயன்படுத்துகின்றனர். நாங்கள் எதாவது நல்ல விஷயத்துக்காகப் பயன்படுத்த ஆசைப்பட்டோம். அது இப்போது உதவுகிறது.

ஒரு முறை 5 வயதுப் பெண் குழந்தை ஹாசினி, சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் எலும்பு தசை புற்றுநோய்க்கான அனுமதிக்கப்பட்டிருந்தார். கணவனை இழந்த அவரின் தாயால், 45 சுழற்சிகளைக் கொண்ட கீமோதெரபி சிகிச்சையைச் செய்ய முடியவில்லை.எங்களின் அறக்கட்டளை அவர்களுக்கு சிகிச்சை செய்ய உதவியது.

தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்று டெல்லியைச் சேர்ந்த நோயாளிகள் உதவி பெற்றிருக்கின்றனர். சில கொடையாளிகள் ஒரு முறை உதவ, பலர் மாதாமாதம் பணம் கொடுத்து உதவுகின்றனர். நிறையப்பேர் அவர்களின் குழந்தைகள் பிறந்தநாளில் பெருந்தொகையை அளிக்கின்றனர். எல்லோரும் எதாவது ஒரு விதத்தில் இல்லாதவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்'' என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x