Last Updated : 18 Jan, 2014 04:17 PM

 

Published : 18 Jan 2014 04:17 PM
Last Updated : 18 Jan 2014 04:17 PM

ட்விட்டரில் கதை சொன்ன நைஜிரிய எழுத்தாளர்

நைஜிரிய எழுத்தாளரான டேஜு கோலோவை (Teju Cole) உங்களுக்குத் தெரியுமா? இது வரை தெரியாவிட்டால் இப்போது தெரிந்துகொள்ளுங்கள். கோலே அப்படி என்ன செய்துவிட்டார் என்று நீங்கள் கேட்கலாம். புதுயுக எழுத்தாளரான கோலே டிவிட்டர் வழியே கதை சொல்வதில் புதுமையை உண்டாக்கி புதிய இலக்கிய வடிவத்தை உண்டாக்கியிருக்கிறார். அதாவது கோலே குறும்பதிவுகள் மூலமாகவே கதை ஒன்றைச் சொல்லியிருக்கிறார். டிவிட்டரை நன்கறிந்தவர்கள், குறும்பதிவுகளாகவே கதை சொல்வது ஏற்கனவே முயற்சிக்கப்பட்டுள்ள விஷயம்தான் என்று வாதிடலாம். உண்மைதான், 140 எழுத்துக்கள் கொண்ட குறும்பதிவுகளாகவே கதை எழுதுவதை ஒரு சில எழுத்தாளர்கள் ஏற்கனவே ஒரு புதிய இலக்கிய வடிவமாகக் கையாண்டுள்ளனர். ஆனால் கோலே என்ன செய்திருக்கிறார் என்றால், மற்றவர்களின் குறும்பதிவுகளைத் திரட்டிக் கதைகளாக மாற்றியுள்ளார். அதாவது மற்றவர்கள் எழுதிய குறும்பதிவுகளை ஒவ்வொன்றாக தனது ட்விட்டர் பகத்தில் மறுகுறும்பதிவு செய்து (ரிடிவீட்) முழுக் கதையையும் உருவாக்கியுள்ளார்.

இவ்வாறு மற்றவர்களையும் பங்கேற்க வைத்து மறுகுறும்பதிவுகளாக யாரும் இதற்கு முன்னர் ட்விட்டரில் கதை சொன்னதில்லை. கோலே தான் இதை முதலில் செய்திருக்கிறார். ட்விட்டர் இலக்கியத்தில் இது ஒரு ஆச்சர்யமான பயன்பாடு தான். பொதுவாக ரிடிவீட் எனும் மறுகுறும்பதிவுகள் ஒருவர் வெளியிட்ட குறும்பதிவுகளை ட்விட்டர் பயனாளிகள் தங்கள் ட்விட்டர் பயனாளிகளோடு பகிர்ந்து கொள்ளப் பயன்படுத்தப்படுகிறது. அந்த குறும்பதிவின் கருத்தை ஆதரிக்கும் வகையில் இவ்வாறு செய்யப்படுவதாகவும் கொள்ளலாம். விதிவிலக்காக சில நேரங்களில் சிலர் மறுகுறும்பதிவு செய்தாலும், அதன் கருத்தைத் தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் குறிப்பிடுவதுண்டு. ஒரு குறும்பதிவு எந்த அளவுக்கு மறுமுறை குறும்பதிவு செய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு அது அதிகமானோரைச் சென்றடைய வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.

எது எப்படியோ, ஒரு கதையை மறுகுறும்பதிவுகளாகவே சொல்லலாம் என்று இதுவரை ஒருவருக்கும் தோன்றவில்லை. டேஜு கோலேவுக்கு தோன்றியிருக்கிறது.

பொது இடத்தில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் நிகழ்வை மையமாகக் கொண்டு ஒரு கதையை முழுவதும் மறுகுறும்பதிவுகளாகவே உருவாகியிருக்கிறார். அந்த குறும்பதிவுகள் ஒவ்வொன்றும் ஒருவரது ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டவை. அவற்றை எல்லாம் கோலே தனது பக்கத்தில் எடுத்து மறுகுறும்பதிவுகளாக வெளியிட்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ச்சியாக படிக்கும்போது மெல்ல கதையின் நகர்வு புரியும். கடைசி குறும்பதிவை படித்ததும் ஒரு அருமையான சிறுகதையை படித்த உணர்வு உண்டாகும். பொதுவாக ட்விட்டர் பக்கத்தில் வெவ்வேறு ட்விட்டர் முகவரிகளின் குறும்பதிவுகளைப் பார்க்கும்போது அவற்றில் அங்கும் இங்கும் அலைபாயும் ஒருவித தொடர்பில்லாத தன்மை இருக்கும். இதற்கு மாறாகப் பல முகவரிகளின் குறும்பதிவுகளை ஒரு ஒத்திசைவோடு படிப்பது புதுமையான அனுபவம் தான். நவீன கதைசொல்லி கோலே இந்த அனுபவத்தைக் கொடுத்து ஒரு சிறுகதையையும் படிக்க வைத்திருக்கிறார்.

‘நான் ஒரு கதை எழுதினேன், நாம் அதை இணைந்து சொன்னோம். இதில் பங்கேற்ற தாராள மனம் கொண்ட சுயநலமில்லாதவர்கள் அனைவருக்கும் நன்றி’ என்று கதையின் முடிவு மறுகுறும்பதிவுக்கு பின் கேலோ தெரிவித்திருந்தார். ட்விட்டர் வழியிலான இந்த இலக்கியக் கூட்டு முயற்சியில் பங்கேற்றவர்களை கோலே முன்கூட்டியே தொடர்புகொண்டு கதைக்கான குறும்பதிவுகளைக் கோரியிருக்கிறார்.

‘ ஒரு மறுகுறும்பதிவு எத்தனை தூய்மையானதாக இருக்கக்கூடும் என்ற எண்னமும், மற்றவர்களை எப்படி உங்கள் ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற வைக்க முடியும் என்ற எண்ணமும் என்னை வசிகரித்தது ’ என்று கோலே இது தொடர்பான பேட்டியில் கூறியிருக்கிறார். மறுகுறும்பதிவு செய்வது உண்டாக்க்கூடிய தயக்கத்திற்கு மாறாக, பலரும் இணைந்து செயல்படுவதற்கான ஒரு நிகழ்வாக இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து இந்த முயற்சியில் ஈடுபட்டதாக கோலே கூறியிருக்கிறார்.

இந்த ட்விட்டர் கூட்டுக் கதையில் என்ன விஷேசம் என்றால் இந்த தனி குறும்பதிவுகள் படிக்கும் போது துண்டு துண்டாக இருந்தாலும், அவற்றை மறுகுறும்பதிவுகளாக ஒருசேர படிக்கும் போது அவற்றை இணைக்கும் மைய சரடு விளங்கிவிடும். கதை சொல்லில் புதிய அனுபவம் தான்.

நைஜிரியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும், டேஜு கோலே , நவீன தொழில்நுட்பம் சார்ந்த இது போன்ற புதிய இலக்கிய முயற்சிக்காக அறியப்படுபவர்.

இதற்கு முன்பாக அவர், ஆளில்லா விமானங்களின் பாதிப்பு பற்றி குறும்பதிவுக் கதைகளை எழுதியிருக்கிறார். ட்ரோன்ஸ் என்று சொல்லப்படும் ஆளில்லா விமானங்கள், சூடான், யேமன், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு அதன் பயனாக யாரேனும் கொல்லப்படுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ட்ரோன் சிறுகதைகள் எனும் தலைப்பில் குறும்பதிவுகளாக குறுங்கதைகளை வெளியிட்டார். புகழ்பெற்ற நாவல்களின் ஆரம்ப வரிகள் ட்ரோன்களின் தாக்குதலால் இடைமறிக்கப்படுவது போல இந்த குறுங்கதைகள் அமைந்திருந்தன. ’ திருமதி டோலவே தானே மலர்களை வாங்கி வருவதாக கூறினார். வழக்கமான (ட்ரோன்) தாக்குதல் மலர் வியாபாரியை சாகடித்தது. புகழ்பெற்ற எழுத்தாளரான வர்ஜீனியா வுல்ப் எழுதிய நாவலின் முதல் வரியைக் கொண்டு இந்த ட்ரோன் குறுங்கதை எழுதப்பட்டிருந்தது. இந்த கதைகள் ஆளில்லா விமான தாக்குதலில் அப்பாவிகள் கொல்லப்படுவதன் தீவிரத்தை ட்விட்டர் மூலம் உணர்த்தின. இந்த வரிசையில் ஏழு குறுங்கதைகளை எழுதினார்.

அதே போல நைஜிரியாவின் லாகோஸ் நகரை மையமாகக் கொண்டு அவர் எழுதும் புதிய புத்தகத்திற்காக ஸ்மால் ஃபிட்ஸ் பிராஜக்ட் எனும் தலைப்பின் கீழ் தனியே குறும்பதிவுகளை வெளியிட்டு வந்தார். நைஜிரிய நாளிதழ்களில் பார்க்கக் கூடிய கிரைம் செய்திகளை எடுத்து சற்றே மாற்றி அதையே ஒரு குறுங்கதையாக டிவிட்டரில் அவர் பகிர்ந்துகொண்டார். நைஜிரியா வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் பற்றிய தெறிப்புகளைக் கொண்டதாக இந்த ட்விட்டர் கதைகள் அமைந்திருந்தன.

கோலேவின் முதல் நாவல் ஒபன் சிட்டி எனும் பெயரில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவின் முன்னணி இதழ்களில் எழுதிவரும் கோலே தேர்ந்த புகைப்பட கலைஞரும்கூட. இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பும் கொண்டவர் . அடிக்கடி இந்தியா வந்து செல்கிறார்.

நவீன தொழில்நுட்பத்தை கோலே நன்றாகப் புரிந்துகொண்டுள்ளதன் அடையாளமாக அவரது இந்தப் புதிய இலக்கிய முயற்சிகள் அமைந்துள்ளன.

பல முகவரிகளின் குறும்பதிவுகளை ஒரு ஒத்திசைவோடு படிப்பது புதுமையான அனுபவம் தான். நவீன கதைசொல்லி கோலே இந்த அனுபவத்தை கொடுத்து ஒரு சிறுகதையையும் படிக்க வைத்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x