

பெரும்பாலும் தெரியாமல் சைபர் குற்றங்களில் சிக்கிக்கொள்வதுதான் வழக்கம். ஆனால், தெரிந்தே சைபர் குற்றங்களில் சிக்கிக் கொள்பவர்களும் உண்டு. அந்த வகையில் போலியான கடன் செயலிகள் வழியே கடன் வாங்கி ஏமாற்றப்படுவோர் பெருகி வருகின்றனர். திருப்பதியைச் சேர்ந்த நவீன் (ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது) போலிக் கடன் செயலியில் கடன் வாங்கியதால் பட்ட அவஸ்தைகள் மற்றவர்களுக்கு ஒரு பாடம்.
பொதுவாக மிகவும் பணக் கஷ்டத்தில் இருப்பவர்களைக் கடன் வழங்கும் போலி செயலிகள் குறிவைத்து அவர்களைப் பகடையாக உருட்டி விளையாடுகின்றன. இவை ‘ஆன்லைன் லோன் ஆப்’ என்கிற பெயரில்தான் இயங்கிவருகின்றன. நவீனுக்கு அவசரமாக ரூ. 25 ஆயிரம் கடன் தேவைப்பட்ட நிலையில், பலரையும் கேட்டுப் பார்த்திருக்கிறார். எங்கும் பணம் கிடைக்காத நிலையில், நண்பர் ஒருவர் கொடுத்த யோசனைப்படி ஆன்லைன் கடன் செயலி வழியாகப் பணம் வாங்கும் முடிவை எடுத்திருக்கிறார்.