

இன்றைய இணைய யுகத்தில் குற்றங்கள் பலவிதமாகப் பெருகிவிட்டன. அதில் ‘பாஸ் ஸ்கேம்’ (Boss Scam) என்பதும் ஒன்று. இந்த மோசடி பற்றித் தற்போது ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கக்கூடும். என்றாலும், இணையக் குற்றங்களில் இது இன்னமும் டிரெண்டிங்கில் உள்ளது. எனவே, இதைப் பற்றி அறிந்துகொள்வது அவரவர் பாக்கெட்டுக்கு நல்லது. இந்த மோசடியில் சிக்கியவர்கள் ஏராளம். அதில், கோவையைச் சேர்ந்த ராதாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருவர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் ராதா பணியாற்றுகிறார். ஒரு நாள் அவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், ராதா பணியாற்றும் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, அதன் உயரதிகாரி என்று சொல்லியிருக்கிறார். உடனடியாக ஒரு வணிக இணையதளத்தில் பரிசு கூப்பன் வாங்கி, அதன் விவரங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பும்படி சொல்லியிருக்கிறார்.