

சைபர் குற்றங்களில் புதிது புதிதாக மோசடிகளை இணையத் திருடர்கள் அரங்கேற்றிவருகிறார்கள். இந்தியாவில் யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் புரட்சியை உண்டாக்கி யிருக்கும் நிலையில், அதன் வழியாகவும் கைவரிசையைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள், இணையத் திருடர்கள். அந்த வழியில் பலரும் பணத்தை இழந்திருக்கிறார்கள். அதில் திருப்பூரைச் சேர்ந்த சந்தோஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் ஒருவர்.
சம்பளப் பணம் தன்னுடைய கணக்கில் கிரெடிட் ஆன பிறகு, ஏடிஎம்மில் சிறிது பணத்தைக்கூட எடுக்க மாட்டார் சந்தோஷ். யாருக்குப் பணம் தருவதாக இருந்தாலும், கடைகளுக்குச் சென்றாலும் யுபிஐ மூலமே பணத்தைச் செலுத்துவார். அவரைப் பொறுத்தவரை திறன்பேசியில் உள்ள யுபிஐ செயலிதான் சகலமும்.