Last Updated : 10 Feb, 2018 01:43 PM

 

Published : 10 Feb 2018 01:43 PM
Last Updated : 10 Feb 2018 01:43 PM

2020-ம் ஆண்டில் மொபைல் போன்களில் கோலோச்சப் போகும் தொழில்நுட்பம் எது?

மொபைல் போன்களில் கைரேகை அடிப்படையிலான அடையாளம் காணும் முறையை விடவும், முக அடையாள வசதி கொண்ட மொபைல் போன்களே 2020ம் ஆண்டு கோலோச்சும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மொபைல் போன் என்பது பேசுவதற்காக மட்டும் என்ற நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அதைவிடவும், காட்சிகளை படம்பிடிக்கும் அதிக திறன் கொண்ட கேமரா, சினிமா பார்க்க ஏதுவான அகன்ற திரை, பாடல்களை கேட்டு ரசிக்கும் வசதி, எந்த ஒரு தேவைக்கும் 'ஆப்' மூலம் தொடர்பு கொள்ளும் வசதி என அனைத்து தொழில்நுட்பத்தையும் கைகளில் வைத்திருப்பதுதான் மொபைல் போன் என்றாகி விட்டது.

அதுபோலவே மொபைல் போன்களில் உள்ள புதிய புதிய அம்சங்கள் வாடிக்கையாளர்களை புதிய போன்கள் வாங்க தூண்டுகின்றன.

இந்திய சந்தையில் புதிய புதிய மொபைல் போன்கள் வந்துவிட்டாலும், கடந்த 2017-ம் ஆண்டிலும், இரண்டு சிம்கார்டு மற்றும் பல மணிநேரம் உழைப்பை வழங்கும் பேட்டரியும் கொண்ட மொபைல் போன்களே அதிகம் மக்களால் ஈர்க்கப்பட்டுள்ளன.

ஆனால, 2018-ம் ஆண்டில் நவீன தொழில்நுட்படத்துடன், பார்க்க அசத்தலாக இருக்கும் பெரிய திரை கொண்ட மொபைல் போன்களுக்கு கூடுதல் மவுசு இருக்கும் என சந்தை வட்டாரங்கள் ஏற்கெனவே மதிப்பிட்டுள்ளன.

அந்த வரிசையில் மொபைல் போன்கள் தங்கள் உரிமையாளரை அடையாளம் காணும் முறை அல்லது போனில் உள்ள அன்லாக் எனப்படும் மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வசதி முக்கியமாக கருதப்படுகிறது. வீடு, அலுவலகங்கள், மற்ற இடங்களில் பலரிடம் போனை தரும் போது, உரிய பாதுகாப்பு அம்சம் இருக்க வேண்டிய தேவை உள்ளது. அதற்காக ஸ்மார்ட் போன்களில் கை விரல்களால் எண்களை தொட்டு லாக் செய்யும் வசதி பல்வேறு போன்களில் உள்ளது.

இதற்கு பாஸ்வேர்டு போல எண்களை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கும். அதேசமயம் சில விலை உயர்ந்த போன்களில் முகம், கண் விழித்திரையின் அடையாளத்தை வைத்து தானாக லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதிகள் உள்ளன. குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வசதி கொண்ட போன் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன.

முகத்தை வைத்து அடையாளப்படுத்தி போன்களை இயக்கும் வசதி இருந்தால் எளிமையாக பயன்படுத்த முடியும். எனவே முகத்தை வைத்த அடையாளப்படுத்தும் இந்த வசதி பல்வேறு தொழில்நுட்பங்களுடன் வரத் தொடங்கியுள்ளன.

எனவே வரும் ஆண்டுகளில் இந்த வசதியுடன் கூடிய மொபைல் போனுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக கவுன்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் இதுதொடர்பாக நடத்தியுள்ள ஆய்வில் கூறியுள்ளதாவது:

‘‘வரும் 2020ம் ஆண்டிற்குள் மக்கள் பயன்படுத்தும் ஒரு கோடி ஸ்மார்ட் போன்கள், முகத்தை பார்த்து அடையாளப்படுத்தும் (Facial recognition) வசதி கொண்டதாக இருக்கும். அந்த அளவிற்கு வாடிக்கையாளர்களிடையே இதற்கு வரவேற்பு உள்ளது. தற்போதுள்ள அன்லாக் வசதி ஞாபக மறதி போன்ற காரணங்களால் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது.

இதுபோலவே பயண நேரம் போன்ற அவசர காலத்தில் தனியாக லாக் செய்ய வேண்டிய அவசியமும் இந்த புதிய வசதியில் தேவையில்லை. எல்லா சூழலுக்கும் ஏற்றதாக உள்ளது. மேலும் தொடுதிரை வசதி குறித்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்த அச்சமும் வாடிக்கையாளர்களிடையே உள்ளன. எனவே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முக அடையாளத்தை வைத்து லாக் செய்யும் முறையை விரும்புகின்றனர். இந்த வசதியில் அதிகபட்ச பாதுகாப்பு அம்சம் இருப்பதாக வாடிக்கையாளர்கள் எண்ணுகின்றனர். ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இந்த மொபைல்போன்களை அதிகம் தயாரித்து வருகின்றன. எதிர்காலத்தில் போட்டியை ஈடுகொடுக்க மற்ற நிறுவனங்களும், இந்த தொழில்நுட்பத்தை தங்கள் போன்களில் கொண்டு வர முயலும்.

2020ம் ஆண்டு உலகம் முழுவதும் 60 சதவீத ஸ்மார்ட் போன்களில் 3டி வசதியுடன் பயன்படுத்ததக்க வசதியுடன் இந்த தொழில்நுட்பம் இடம் பெற வாய்ப்புள்ளது. ஆனால் இந்த தொழில்நுட்பத்திற்கு அதிகமான செலவு ஆகிறது. அந்த செலவை குறைத்து மக்கள் வாங்கும் விலையில் இந்த வசதிகளுடன் போன்கள் அதிகம் தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது’’ என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x