படம்: ட்விட்டர்
படம்: ட்விட்டர்

சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய 297 ஓட்டுநர்கள்: போலீஸுக்கு உதவிய AI கேமரா!

Published on

லண்டன்: பிரிட்டனில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 3 நாட்களில் சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய 297 ஓட்டுநர்களை போலீஸுக்கு அடையாளம் காட்டியுள்ளது ஏஐ கேமரா.

கடந்த ஆண்டு இதை பொருத்தி சோதனை ஓட்டம் பார்த்துள்ளனர் டெவன் மற்றும் கார்ன்வால் பகுதி போலீஸார். அதில் வாகனம் ஓட்டியபடி போனில் பேசியவர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாதவர்களை ஏஐ கேமரா சுட்டிக்காட்டியுள்ளது. அந்த காட்சியை மனிதவளத்தை கொண்டு உறுதி செய்த பின்னர் அபராதம் விதிக்கலாம் என போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அந்தப் பகுதியில் ஏஐ கேமராவை நிரந்தரமாக பொருத்தியுள்ளனர். கேமரா இன்ஸ்டால் செய்யப்பட்ட முதல் 72 மணி நேரத்தில் மட்டுமே 117 பேர் வாகனம் ஓட்டிய போது மொபைல் போன் பயன்படுத்தியது மற்றும் 180 பேர் சீட் பெல்ட் அணியாத காரணத்தாலும் கேமரா பார்வையில் சிக்கியுள்ளனர். அதை போலீஸார் உறுதி செய்து அபராதம் விதித்துள்ளனர். வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது அவசியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதை மேற்கொண்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஏ30 எனும் அமைப்பை இதற்காக அந்த பகுதி போலீஸார் அறிமுகம் செய்துள்ளனர். அதிவேக ஏஐ கேமராக்கள், இன்ஃப்ரா ரெட் ஃப்ளாஷ்கள் மற்றும் வாகனங்களின் தெளிவான படங்களைப் பிடிக்க மேம்படுத்தப்பட்ட வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. விதி மீறுபவர்களை ஏஐ கேமரா அடையாளம் கண்டு சொல்ல அதை உறுதி செய்த பின்பே அபராதம் விதிக்கப்படுகிறதாம். வீதி மீறுபவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த ஏஐ கேமரா புரோகிராம் செய்யப்பட்டுள்ளதாம்.

இந்தியாவிலும் பயன்பாட்டில் உள்ளது: சாலை விதிகளை மீறுபவர்கள் மீது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போலீஸார் அபராதம் (சலான்) விதித்து வருகின்றனர். சிசிடிவி கேமரா, சக வாகன ஓட்டிகள் சமூக வலைதளத்தில் எழுப்பும் புகார் மற்றும் விதி மீறலை நேரடியாக பார்த்தும் போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையிடம் சமூக வலைதளம் வழியே புகார் எழுப்பினால், அதனை சரிபார்த்து, அபராதம் விதிப்பது வழக்கம். அதற்கான ஆதரத்தையும் போலீஸார் புகார் கொடுத்தவர்களுக்கு ரிப்ளை மூலம் தெரிவிப்பார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in