Published : 04 Jul 2014 11:12 AM
Last Updated : 04 Jul 2014 11:12 AM

ட்விட்டரின் பின்தொடர்வோர் எண்ணிக்கை: உலகத் தலைவர்களில் மோடிக்கு 3-வது இடம்

ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்வோரைக் கொண்டிருக்கும் உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

முதலிடத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இரண்டாவது இடத்தில் கத்தோலிக்க மதகுரு போப் ஆகியோர் இருக்கின்றனர்.

இந்தோனேசிய அதிபர் எஸ்.பி.யுதோயோனோவை நேற்று (வியாழக்கிழமை) பின்னுக்குத் தள்ளி மோடி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். நரேந்திர மோடியை 50 லட்சத்து 90 ஆயிரம் பேர் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.

'ட்விட்டர் வலைத்தளத்தை நரேந்திர மோடி மிகவும் சுறுசுறுப்பாக கையாண்டு வருகிறார். இந்திய மக்கள் அனைவருடனும் சுலபமாக தொடர்பு கொள்ளும் சமூக ஊடக மேடையாக அவர் ட்விட்டரை பயன்படுத்தி இருக்கிறார். இதன் மூலம், ட்விட்டர் தொழில்நுட்ப ராஜதந்திரத்திற்கான ஒரு உபகரணம் என்பதை மோடி நிரூபித்திருக்கிறார்' என்று ட்விட்டர் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடந்த புதன்கிழமை இந்தியாவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக வந்த ஃபேஸ்புக் சி.ஓ.ஓ ஷெரில் சேண்ட்பெர்க் கூறுகையில், "ஃபேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் அரசியல் தலைவர்களில் மோடி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தை 1 கோடியே 80 லட்சம் பேர் பேர் லைக் செய்துள்ளனர். முதலிடத்தில் ஒபாமா இருக்கிறார்" என்றார்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர், மோடி ட்விட்டர் கணக்கை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சம் அதிகரித்துள்ளது. அதேவேளையில், மோடியின் அதிகாரப்பூர்வ பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்திற்கான ஃபாலோயர்ஸ் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

மோடியின், “India has won!” (இந்தியா வெற்றி பெற்றுவிட்டது) என்ற தேர்தல் வெற்றி ட்வீட்தான் இந்தியாவில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டாக இன்றளவும் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x