Last Updated : 13 Oct, 2017 10:48 AM

 

Published : 13 Oct 2017 10:48 AM
Last Updated : 13 Oct 2017 10:48 AM

இளமை.நெட்: தானாகப் படமெடுக்கும் மாய கேமரா!

கூ

குள் கண்ணாடியை நினைவு இருக்கிறதா? இந்த அதி நவீன மூக்குக் கண்ணாடி பரபரப்பை ஏற்படுத்திய அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. இப்போது கூகுள் வெள்ளோட்டம் விட்டிருக்கும் கூகுள் கிளிப்ஸ் கேமராவைப் பார்த்தால், கூகுள் கிளாஸ் நினைவுக்கு வருகிறது. ஸ்மார்ட் கேமரா எனப்படும் கூகுள் கிளிப்ஸ் உள்ளங்கைக்குள் அடங்கிவிடக்கூடிய சதுர வடிவ கேமராவாக இருக்கிறது.

பரிச்சயமாகும் கேமிரா

இந்த கேமராவில் சின்னஞ்சிறிய லென்ஸ் மட்டுமே இருக்கிறது. வியூபைண்டர் கிடையாது. எனவே, இதைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டில் எங்கேயாவது ஒரு மூலையில் தொங்கவிட்டால் போதும், அது தானாகப் படம் எடுத்துக்கொள்ளும். அது மட்டுமல்ல, தான் பார்க்கும் முகங்களை நினைவில் நிறுத்திக்கொள்ளும் ஆற்றலும் கொண்டிருக்கிறது. ஆக, நாளடைவில் இது முகங்களை நன்றாகப் பரிச்சயம் செய்துகொண்டு, அறிமுகம் இல்லாதவர்களைப் படம் எடுப்பதைத் தவிர்க்கவும் கற்றுக்கொண்டுவிடும் என்கிறார்கள்.

மற்றபடி வீட்டில் இருக்கும்போது, சுவாரசியமான தருணங்கள் எனக் கருதப்படும் காட்சிகளை அது படம் எடுத்தபடி இருக்கும். ஒவ்வொரு காட்சியும் ஏழு நொடிகள் ஓடக்கூடியதாக இருக்கும். இவற்றிலிருந்து தேவையான காட்சியைத் தேர்வுசெய்து ஒளிப்படமாக மாற்றிக்கொள்ளலாம். அப்படியே தொடர் படமாகவும் பயன்படுத்தலாம். ஆனால், ஒலி வசதி கிடையாது. எனவே, வீடியோ என்று சொல்ல முடியாது.

கேமராவுடன் இணைக்கப்பட்ட பிரத்யேகச் செயலி மூலம் ஸ்மார்ட்போனில் படங்களைப் பார்க்கலாம். அதிலேயே சேமித்துக்கொள்ளலாம். தேவையெனில் கையாலும் படமெடுக்கலாம். இதற்கான ஷட்டர் வசதி இருந்தாலும், இந்த கேமராவை அதன் போக்கில்விடுவதுதான் சிறந்தது என கூகுள் நினைக்கிறது. உதாரணத்துக்கு மழலைகள் உள்ள வீட்டில் கேமராவை ஒரு மேஜையில் பொருத்திவிட்டால், மழலையின் குறும்புகளும் மந்தகாசமான புன்னகைகளும் அழகாகப் பதிவாகியிருக்கும்.

பெற்றோர் அருகே இல்லாவிட்டால்கூட, கேமிரா கச்சிதமாகக் குழந்தையின் பொன்னான தருணங்களைப் பதிவு செய்துகொள்ளும். சும்மா இல்லை, 130 கோணங்களில் காட்சிகளைப் படமெடுக்கும். செல்லப் பிராணிகள் மீது பாசம் கொண்டவர்களும் இந்த கேமராவைப் பயன்படுத்தலாம்.

அபாயம் இல்லை

சுற்றுப்புறத்தைப் புரிந்துகொண்டு, அதில் தென்படும் முகங்களை உணர்ந்து, தானாகப் படமெடுக்கும் கேமரா, தானாகப் படமெடுக்கும்போது சிக்கக்கூடிய அற்புதமான தருணங்களை நினைத்துப் பார்த்து வியக்க வைத்தாலும், இன்னொரு புறம் இது அந்தரங்கத்தின் மீதான ஊடுருவல் என்ற அச்சத்தை உருவாக்குகிறது. கூகுள் இதை உணராமல் இல்லை. அதானால்தான் கேமரா என்று எல்லோரும் உணர்ந்துகொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து வெளியாகும் சிவப்பு ஒளி கேமரா படமெடுத்துக்கொண்டிருப்பதை உணர்த்தும் என்பதால், எதிரே இருப்பவர்கள் அறியாமல் படமெடுக்கப்படும் அபாயம் இல்லை. தவிர, இதன் பயன்பாடு பெரும்பாலும் வீட்டுச் சூழலில் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பும் மாறுபட்டதாகவே இருக்கும்.

மேலும், இதில் பதிவாகும் காட்சிகள் வேறு எங்கும் தானாகச் சேமிக்கப்படாது. இவற்றிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட ஒளிப்படங்கள் மட்டுமே கிளவுட் வசதியில் ஒருங்கிணைக்கப்படும். எனவே, ஒளிப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பும் குறைவு. இந்த கேமரா அதன் உரிமையாளருக்கே விசுவாசமாக இருக்கும். வீட்டில் தெரிந்த முகங்களுக்குப் பழகி, அவர்களைப் படமெடுக்கவே முற்படும். பூங்காவில் சென்று அமர்ந்திருக்கும் போதுகூட, மற்ற குழந்தைகளை விட்டு, உரிமையாளர் குழந்தையின் விளையாட்டையே இது பதிவு செய்ய முற்படும். எல்லாம் செயற்கை நுண்ணறிவு செய்யும் மாயம்.

தினசரி வாழ்க்கைக் காட்சிகளை இடைவிடாமல் பதிவுசெய்யும் வசதியை ‘லைப்லாகிங்’ என்கிறார்கள். புதுமையான கருத்தாக்கம் என்பதைக் கடந்து, இது நடைமுறை வாழ்க்கையில் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஒருவிதத்தில் கூகுள் கேமராவும் இந்தப் பிரிவின் கீழ்தான் வருகிறது. இந்த கேமரா எந்த வகையான வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வீட்டை ஸ்மார்ட் இல்லமாக்கும் போட்டியில் கூகுளும் களம் இறங்கியுள்ளது. இதனால் சராசரி வாழ்க்கை மேம்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x