

சாலைப் பாலத்துக்கும், புதிய ரயில் பாலத்துக்கும் நடுவே உள்ள பழைய பாம்பன் ரயில் பாலம் அகற்றப்பட உள்ளது.
ராமேசுவரம்: பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணிகள் தொடங்கின. 4 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மண்டபம் நிலப்பரப்பையும், ராமேசுவரம் தீவையும் இணைப்பதில் பாம்பன் ரயில் பாலமும், இந்திரா காந்தி சாலைப் பாலமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 1914-ல் பாம்பன் ரயில் பாலம் (செஷர்ஸ் பாலம்) திறக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது. நாட்டில் கடலின் நடுவே அமைக்கப்பட்ட முதல் பாலம் இதுவாகும்.
இந்தப் பாலத்தில் கப்பல்கள் செல்வதற்காக நடுவில் தண்டவாளங்களுக்கு இடையே தூக்குப் பாலம் அமைக்கப்பட்டிருந்ததே இதன் சிறப்பாகும். இந்தப் பாலம் 1964-ம் ஆண்டு புயலில் சேதமடைந்து மறுசீரமைப்பு செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
நூற்றாண்டுகளைக் கடந்த இந்தப் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், புதிய பாலத்துக்கு 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 2020-ல் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த ஆண்டு ஏப்.6-ம் தேதி பிரதமர் மோடியால் புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
கப்பல்கள், படகுகள் செல்வதற்காக புதிய ரயில் பாலத்தின் நடுவே உள்ள செங்குத்துத் தூக்குப் பாலம் ஒவ்வொரு முறை தூக்கப்படும்போதும், பழைய ரயில் தூக்குப்பாலமும் திறக்கப்பட வேண்டியதுள்ளது. இதனால், பழைய ரயில் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முன்வந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) என்ற ரயில் உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசின் நிறுவனம், பழைய பாம்பன் பாலத்தை அகற்ற ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிப்பு வெளியிட்டது.
அந்த அறிவிப்பில் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலத்தின் நடுவில் உள்ள தூக்குப்பாலம் மற்றும் கர்டர் பாலம், தண்டவாளங்களை ரூ.2.53 கோடியில் அகற்ற ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டு பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. நான்கு மாதங்களுக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.