

கோப்புப் படம்
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.31 கோடி பெண்களுக்கு ஜூன் மாதத் தொகை வங்கிக் கணக்கில் நேற்று வரவு வைக்கப்பட்டது. அதேநேரம் தவெக அறிவித்த ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் 1.31 கோடி பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
தவெக ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின்போது தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று கடந்த மே மாதம் ஆட்சியமைத்தை தொடர்ந்து, சட்டப்பேரவை விவாதத்தில் முதல்வர் விஜய் பேசும்போது, திமுக அரசின் திட்டங்கள் தொடரும் என்று அறிவித்தார். அதேபோல், தவெக அறிவித்த மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும்.
அதற்கு காலஅவகாசம் தேவை என அறிவித்தார். இதனால் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை நிறுத்தப்படுமோ? என்று பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், கடந்த மாதம் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. அதேபோன்று இந்த மாதமும் பெண்களுக்கான உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் நேற்று வரவு வைக்கப்பட்டது.
இதற்கிடையே, 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும்? என எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், ஏற்கெனவே மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் அடைந்துவரும் பெண்களுக்கு ரூ.1000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படுமா? அல்லது புதிதாக விண்ணப்பங்கள் பெற்று பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்களா? என்ற கேள்வியும் மகளிர் மத்தியில் நிலவுகிறது.