

கரூர்: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் இடங்கள் கேட்போம் என மா.கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
கரூர் சுங்கவாயிலில் உள்ள அலுவலகத்தில் இன்று (டிச. 14ம் தேதி) மா.கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியது: 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என பெயர் மாற்றம் செய்ய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
காந்தி என்ற பெயரை மாற்றுவதற்காக இப்பெயரை கொண்டு வந்துள்ளனர். மேலும் உத்தரவாதம் என்பதை நீக்கியுள்ளனர். இதன் மூலம் பயனாளிகள் உரிமையை இழக்கின்றனர். இனி வேலை தருவது அரசின் விருப்பம் அதனை உரிமையாகக் கோர முடியாது.
விதை சட்டம், மின்சார சட்டம், காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீத அந்நிய முதலீடுகளை அனுமதித்து தனியார்மயமாக்குதல், அணுசக்தி என திட்டங்கள் நீண்ட காலம் விவாதத்தில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற உள்ளன. மின்சார சட்டம் அமலுக்கு வந்தால் மானிய, சலுகை மின்சார திட்டங்களை செயல்படுத்த முடியாது. ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படலாம்.
கரூர் வெண்ணெய்மலை கோயில் இனாம் நில விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதி வழங்கவில்லை. நீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பித்து மத்திய பாதுகாப்பு படை போலீஸார் மூலம் நிறைவேற்றுவோம் என நீதிபதிகள் கூறுவது பேஷனாகிவிட்டது. மாநில அரசு உள்ளபோது மத்திய படைகள் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். வரம்பு மீறி நீதிபதிகள் பேசி வருகின்றனர்.
2026-ம் ஆண்டு தேர்தலில் திமுகவிடம் கூடுதல் இடங்கள் கேட்போம். 2026-ம் ஆண்டு தேர்தலில் பாஜக, அதிமுக ஆட்சி பொறுப்புக்கு வரக்கூடாது. தேர்தலில் அவர்களை வீழ்த்தும் வலிமை படைத்த அணியாக திமுக உள்ளது.
தவெக தலைவர் விஜய் பாஜகவை கொள்கை எதிரி என கூறினார். ஆனால் அவர் அணுகுமுறையில் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு கரூருக்கு முன், கரூருக்கு பின் என மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதால் கொள்கை எதிரியை விமரிசிப்பதில்லை.
கேரளாவில் ஒரு மாநகராட்சியை பாஜக கைப்பற்றிய நிலையில் மாநிலத்தையே கைப்பற்றியது போல பிரதமர் ட்வீட் போட்டுள்ளார்.
எஸ்ஐஆர் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருப்பினும் தகுதி வாய்ந்த ஒரு வாக்காளர் கூட விடுப்பட்டு விடாமல் வாக்காளர்களை சேர்க்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட தலைவர் மா.ஜோதிபாசு, மாநகர செயலாளரும், கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான ம.தண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக, கரூர் வெண்ணெய்மலை இனாம் நில குடியிருப்போரை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சந்தித்து அவர்களிடையே சிறப்புரையாற்றி திரும்பினார்.