

சென்னை: தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உளளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஆக.17) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (18-ம் தேதி) செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலும், 19-ம் தேதி நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
மேற்கண்ட 2 நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.