ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை விஜய் நேற்று சந்தித்த காட்சி
சென்னை: “ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை. பெரும்பான்மை பலம் விஜய்யிடம் இல்லாததால், அதை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சி அமைக்க அழைக்க முடியும்” என்று விஜய்யிடம் ஆளுநர் கூறியதாக லோக் பவன் விளக்கமளித்துள்ளது.
தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை ஆளுநர் மாளிகைக்குச் சென்று நேற்று சந்தித்தார். அப்போது, ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை அவரிடம் வழங்கினார். இந்நிலையில், இன்று மீண்டும் விஜய், ஆளுநரை சந்திக்க ஆளுநர் மாளிகைக்குச் சென்று சந்தித்தார்.
இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்றும் பின்னர் இல்லை என்றும் மாறி மாறி செய்திகள் வெளியாகின. தவெக தரப்பும் சந்திப்பு பற்றி ஏதும் சொல்லவில்லை.
இந்நிலையில், இந்த சந்திப்பு தொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்: “தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் மாளிகைக்கு அழைத்திருந்தார்.
அந்தச் சந்திப்பின்போது, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆட்சியமைக்க தேவையான அந்த பெரும்பான்மை எண்ணை விஜய் காட்டவில்லை.” என்று ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காதது குறித்து ஆளுநர் எடுத்துரைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன என்ற எதிர்பார்ப்பு குறித்து தவெக தரப்பில் இன்னும் மவுனம் கலைக்கப்படாத நிலையில், ஆளுநர் தரப்பு விளக்கம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ‘இந்து தமிழ் திசை’-க்கு, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் விஜய் - ஆளுநர் சந்திப்பு இணக்கமாகவே இருந்தததாகக் கூறுகிறது.
நிலையான அரசு.. மேலும், “பெரும்பான்மை பலம் இருப்பதை உறுதிப்படுத்திய பிறகே, ஆட்சி அமைக்க உரிமை கோரி அளித்த கடிதத்தை பரிசீலிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஏனெனில், மாநிலத்தில் ஒரு நிலையான அரசு அமைய வேண்டும் என்பதையே ஆளுநர் விரும்புகிறார். பெரும்பான்மை பலம் உறுதிப்படுத்தப்பட்ட உடனேயே, விஜய் பதவியேற்கலாம்.” என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.