

கே.என்.நேரு
திருச்சி: தவெக தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.என்.நேரு இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தேர்தலில் யாரும், எங்கும் போட்டியிட உரிமை இருக்கிறது. அந்த வகையில் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுகிறார். களத்தில் சென்று மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஸ்டாலினுக்கே மக்கள் ஆதரவளிப்பார்கள் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.
விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார், அதற்கு காரணம் பயமா என்பது எனக்கு தெரியாது. ஆனால், 1977-ல் திருச்சியில் திமுக எங்குமே வெற்றி பெறாதபோது வெற்றி பெற்ற ஒரே தொகுதி திருச்சி கிழக்கு. எனவே இம்முறையும் திமுக அந்த தொகுதியில் வெற்றி பெறும்.
திமுகவின் தேர்தல் கதாநாயகனாக இந்த தேர்தல் அறிக்கை உள்ளது. எனவே மக்கள் திமுகவுக்கே மீண்டும் வாக்களிப்பார்கள்” என்றார்.