

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் நாளை (ஆக.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் லட்சத்தீவு பகுதிகள் வரை தென் தமிழகம் மற்றும் கேரளா வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை சுமார் 5.8 கி.மீ முதல் 7.6 கி.மீ உயரம் வரை நிலவுகிறது.
வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.\
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஆக.7) கோவை, தேனி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நாளை இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆக.8 முதல் 12-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஆக.7) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாதவரம், ஐஸ் ஹவுஸில் தலா 4 செ.மீ மழை, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, விம்கோ நகர், நுங்கம்பாக்கம், பேசின் பாலம், பெரம்பூர், காசிமேடு, எண்ணூர், பாரி முனை, மயிலாப்பூர், சென்னை ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.