

கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் நாளை (பிப்.24) முதல் மார்ச் 1-ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து அதே பகுதிகளில் நிலவுகிறது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கக் கூடும்.
தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (பிப்.24) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
பிப்.25 முதல் 27-ம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்.28 முதல் மார்ச் 1-ம் தேதி வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 4 செ.மீ, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, சிவலோகம், குழித்துறை, சுருளக்கோடு, புத்தன் அணை ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.