நிர்மல்குமார்
“கரூர் சம்பவத்தில் சந்தேக நபர்கள் குறித்து சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்தோம்” - நிர்மல்குமார்
கரூர்: “தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு சதிச் செயல் தான் காரணம். சந்தேகப்படும் நபர்கள் குறித்து சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்” என்று தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.
கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ், வழக்கறிஞர் அரசு ஆகியோர் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
தொடர்ந்து அவர்கள் இன்று 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகினர். பின்னர் செய்தியாளர்களிடம் சி.டி.நிர்மல்குமார் கூறியது: “பிரச்சாரத்துக்கு விஜய் ஏன் காலதாமதமாக வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஒவ்வொரு கிலோ மீட்டர் தொலைவையும் கடக்க ஒரு மணி நேரமானது. தன்னார்வலர்களைக் கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றோம். சிபிஐ விசாரணையின்போது பிரச்சாரத்துக்காக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகள், நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளோம்.
விசாரணைக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்கியுள்ளோம். இந்தச் சம்பவம் ஒரு சதி செயல். சந்தேகப்படும் நபர்கள் குறித்து சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.
கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என்பது தெரியும். தேவைப்பட்ட வீடியோ புட்டேஜ்களை வழங்கியுள்ளோம். தற்போது சிபிஐ விசாரணை நடந்து வருவதால் சதிச் செயலில் ஈடுபட்டவர்கள் யாரென வெளிப்படையாக கூற முடியாது” என்று அவர் கூறினார்.
