

கோவில்பட்டி: சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும் என அவரது கொள்ளுப்பேத்தி செல்வி கோரிக்கை விடுத்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது கொள்ளுப்பேத்தியும், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலருமான உ.செல்வி தனது வீட்டில், நேற்று காலை வ.உ.சி.யின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும். இது எங்கள் குடும்பம் மற்றும் வழக்கறிஞர்களின் நீண்ட கால கோரிக்கையாகும். அவர் பிறந்த இல்லம் உள்ள ஓட்டப்பிடாரத்தில் வஉசிக்கு பிரம்மாண்ட மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
சுதந்திர போராட்ட தியாகிகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுசம்பந்தமாக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என அனைத்து தியாகிகளின் வாரிசுதாரர்களின் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு கூறினார். அப்போது வழக்கறிஞர் போ.முருகானந்தம், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், ரோட்டரி சங்க தலைவர் முத்துமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.