

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தேசிய தலைவர் காதர் மொகிதீன். உடன் அமைச்சா் ஷாஜகான் உள்ளிட்டோர். படம்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி / மதுரை: முதல்வர் விஜய் கர்நாடகம் செல்வதற்கு ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொகிதீன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் கூறியது: உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தவெக கூட்டணியிலேயே ஐயுஎம்எல் தொடர்ந்து பயணிக்கும். நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம் டெல்லியை குலுக்கிவிட்டது. நீட் தேர்வை முற்றிலும் ஒழித்து, கல்வியை மாநில கல்வி பட்டியலில் சேர்த்தால் முழுமையான தீர்வு கிடைக்கும்.
காவிரி நீர், மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் விஜய் கர்நாடகம் செல்வது ஒரு அற்புதமான முடிவு. இதனால் தமிழகத்துக்கு சாதகமான முடிவு தான் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் வரவேற்றுள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளுக்கு தண்ணீர் பெற்றுத்தரும் நிலை தவெக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. டெல்டா விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தமிழக முதல்வரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதுதல், சட்ட ரீதியாக போராடுவது என்பதை கடந்து, 12 ஆண்டுகளுக்கு பின்பு தமிழகத்திலிருந்து ஒரு முதல்வர், கர்நாடகா மாநிலம் சென்று அங்குள்ள முதல்வரை சந்தித்து காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட நினைப்பது வரவேற்கத்தக்கது. அவரது முயற்சி வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துக்கிறோம். எங்களுக்கு காங்கிரஸ்கட்சியோடு எவ்வித கோபமும் கிடையாது. காமராஜர் ஆட்சி அமைப்பதுதான் காங்கிரஸ், தமாகாவின் நோக்கம்.