

மதுரையில் தனியார் கல்லூரியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர்.
மதுரை: முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி காமராஜரின் ஆட்சியைப்போல் நேர்மையாக இருக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் ‘லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.
விழாவில் ப.சிதம்பரம் பேசியதாவது: தமிழ்நாட்டில் காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் லஞ்சம் என்பதே கிடையாது. புதிதாகப் பொறுப்பேற்ற தவெக ஆட்சியிலும் லஞ்சத்தைத் தவிர்க்கும் முயற்சி நடக்கிறது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் பணி நியமனம், இடமாறுதல் உள்ளிட்டவற்றில் லஞ்சம் பெறப்படுவதில்லை.
இதேபோல், இன்னும் பல துறைகளில் லஞ்சத்தை தவிர்க்க வேண்டும். இதை முதல்வர் விஜய்யின் ஆட்சி செய்யும். தமிழகத்தில் மீண்டும் லஞ்சம் தவிர்த்த காமராஜரின் ஆட்சியாக அடுத்த ஐந்தாண்டுகள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், ‘காமராஜர் மாடல் அரசை யாராலும் கொண்டுவர முடியவில்லை. தற்போது முதல்வர் விஜய் அதைத் தொடங்கி இருக்கிறார். நேர்மையான ஆட்சியை வழங்க முயற்சிக்கிறார்’ என்றார்.