

சென்னை: ‘தவெக தலைவர் விஜய் அவருடைய கட்சியினருக்கு அறிவுரை கூறி உளவியல் ரீதியாக அவர்களை பக்குவப்படுத்த வேண்டும்’ என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்துகொண்ட கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சோக நிகழ்வு ஏற்கனவே நடந்து முடிந்து சில மாதங்கள் கூட ஆகாத நிலையில்...
இன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த விஜய்யை காணும் ஆர்வத்தில் அவரது வாகனத்தை அவரது ரசிகர்களும், தொண்டர்களும் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக பின்தொடர்ந்து சென்றதில் மிகப்பெரிய சாலை விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனங்களில் சென்ற இளைஞர்கள் சிலர் ஆபத்தான நிலையில் தஞ்சையிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்துள்ள தகவல்கள் கவலையளிப்பதாக உள்ளது.
மேலும் தவெக நடத்திய தஞ்சை மாநாட்டில் மாநாட்டுப் பந்தலின் நுழைவுப்பகுதியில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு திடீரென ஒரு மிகப்பெரிய கூட்டத்தினர் ஆவேசமாகவும், பரபரப்பாகவும் மாநாடு நடைபெறும் திடலை நோக்கி ஒடி வருகிற காட்சியை சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் காண நேரிட்டது. கூட்ட நெரிசலிலும் பரபரப்பாக ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டும் ஓடிவரும் போது அவர்களில் யாருக்கு என்ன நேருமோ என பார்ப்பவர்களுக்கு பயம் வருவது போல இருக்கிறது.
தவெக நடத்தும் நிகழ்ச்சிகளில் தனி மனித கட்டுப்பாடோ, துல்லியமான திட்டமிடலோ, பாதுகாப்பு நடவடிக்கைகளோ, எதுவுமே பின்பற்றப்படாமல் ஒழுங்கு முறையற்ற ஒரு ஆவேச கூட்டம் நடைபெறுவது போலவே இருக்கிறது.
தவெக தலைவர் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் தக்க அறிவுரை கூறி இனிவரும் காலங்களில் பக்குவத்தோடு தனது கட்சியினர் நடந்தகொள்ளும் அளவிற்கும், தவெக நிகழ்ச்சிகளில் தனது கட்சியினர் கலந்துகொள்ளும் போது அவரது கட்சியினர் பொது அமைதிக்கு ஊறு விளைவிக்காதவாறும், தவெக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் இளைஞர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக நிகழ்ச்சி முடிந்து திரும்பி தங்களுடைய வீடுகளுக்கு வரும் வரை ஒருவித அச்சத்துடனேயே இருப்பதை இனிவரும் காலங்களில் தவிர்க்கும் வகையிலும் அவருடைய கட்சியினருக்கு அறிவுரை கூறி உளவியல் ரீதியாக அவர்களை பக்குவப்படுத்த வேண்டும் என அவருக்கு அறிவுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்தார்.