

மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள பிரசித்தி பெற்ற சாய்பாபா கோயிலில் நடிகரும், தவெக கட்சித் தலைவருமான விஜய் நேற்று வழிபட்டார்.
சென்னை: தவெக தலைவர் விஜய் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோயிலில் நேற்று வழிபாடு செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தனது ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனையின்படி முக்கியமான ஆன்மிகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நேற்று முன்தினம் விஜய் சென்றார். அங்கு மூலவரைத் தரிசித்த விஜய், தனது அரசியல் வெற்றிக்காகவும், எதிர்ப்புகள் விலகவும் வேண்டி, மிகுந்த சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் சத்ரு சம்ஹார யாகத்தை முறைப்படி நடத்தினார். இந்த யாகம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
திருச்செந்தூர் பயணத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள சீரடி சாய்பாபா கோயிலில் நேற்று விஜய் தரிசனம் செய்தார். இதற்காக நேற்று அதிகாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், மகாராஷ்டிராவின் அஹில்ய நகர் (அகமது நகர்) சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் சீரடி சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவரைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பிற்பகல் 1 மணி அளவில் சீரடி சாய்பாபா கோயிலை அடைந்த விஜய்க்கு, கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுமார் அரை மணி நேரம் கோயிலில் தங்கியிருந்த அவர், சாய் பாபாவின் சமாதிக்கு முன்பு அமர்ந்து அமைதியான முறையில் பிரார்த்தனை செய்தார். தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விஜய்யின் இந்த அடுத்தடுத்த ஆன்மிகப் பயணங்கள் அவரது கட்சியினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஆலோசனை: சென்னை பனையூரில் கட்சி வேட்பாளர்களுடன் விஜய் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் இதில் பங்கேற்க உள்ளனர். கருத்துக் கணிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தும் விஜய், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நிர்வாகிகள், முகவர்களுக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகளை பிறப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.