

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனம் மற்றும் டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பணி நியமனம் செய்ய லட்சணக்கணக்கில் பணம் வசூலித்து ரூ.1,000 கோடிக்குமேல் ஊழல் நடந்துள்ளதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. இதன் அடிப்படையில், அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன், அதிமுக எம்.பி. இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தநிலையில் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:
அரசு தலைமை வழக்கறிஞர்பி.எஸ்.ராமன்: மனுதாரர் ஆதிநாராயணன் மீது 2013 முதல் பதிவுசெய்யப்பட்ட 32 வழக்குகளில் 18 வழக்குகள் முடிந்துவிட்டன. 2 கொலை, ஒரு கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. (இதற்கு விளக்கம் அளித்து ஆதிநாராயணன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.)
தலைமை நீதிபதி: மனுதாரர் தொடர்ந்துள்ள இந்த வழக்கின் உண்மைத் தன்மை குறித்த சந்தேகம் எழுகிறது.
இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி: இந்த முறைகேடு குறித்து ஆதாரங்களுடன் அமலாக்கத் துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதன் அடிப்படையில் அமைச்சர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியலாம்.
அமலாக்கத் துறை வழக்கறிஞர் என்.ரமேஷ்: பெரும் தொகை லஞ்சமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆதாரங்களை காவல் துறை அதிகாரிகளுக்கு அனுப்புவது சட்டப்பூர்வக் கடமை.
தலைமை நீதிபதி: ஆரம்பகட்ட விசாரணை நடத்தாமல் நேரடியாக வழக்கு பதிவு செய்தால்,குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதை காரணம் காட்டி வழக்கை ரத்து செய்யக் கோரலாம்.
லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ: அதிகாரப்பூர்வமற்ற ஆவணங்களின் அடிப்படையில் மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அமலாக்கத் துறைகடிதத்தின்படி விசாரணை தொடங்கியுள்ளது.
வழக்கறிஞர் ராமன்: ஆரம்பகட்ட விசாரணையை முடிக்கலஞ்ச ஒழிப்புத் துறைக்கு 120நாட்கள் அவகாசம் உள்ளது.
டிஜிபி தரப்பு வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி: வழக்கு தொடர மனுதாரர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை. இவ்வாறு வாதம் நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின்தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.