

சென்னை: ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீடு திட்ட குறைகளை நீக்கி திருத்தப்பட்ட அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டம் கடந்த 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சைக்கு பதிலாக 'பேக்கேஜ்' அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'பேக்கேஜ்' எவ்வளவு வழங்கப்படும் என்று அரசாணையில் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த 'பேக்கேஜ்' காப்பீட்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கேற்ப 'பேக்கேஜ்' முறையாகவே உள்ளது. முந்தைய காப்பீட்டுத் திட்டங்களில் சிகிச்சைக்காகும் செலவில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை காப்பீட்டு நிறுவனம் வழங்கி வந்தது.
இப்போது உள்ள 'பேக்கேஜ்' திட்டத்தில் 15 சதவீதம் முதல் 25 சதவீதம்தான் கிடைக்கும் என்று தெரிகிறது. இத்திட்டத்தில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரமாக இருந்த உச்ச வரம்பு ரூ.13 ஆயிரமாகக் குறைக்கப்பட்டு, லென்ஸ் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆஞ்சியோ பிளாஸ்டி, இரண்டு ஸ்டெண்ட் வைத்தாலும் ரூ.85 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும். இப்படி ஒவ்வொரு சிகிச்சைக்கும் வழங்கப்படும் 'பேக்கேஜ்' தொகை மிகக் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த 'பேக்கேஜ்'க்கு மருத்துவத் துறை ஒப்புதல் அளித்ததாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் ஓய்வூதியர்களுக்கான திட்டத்தில் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளதாக தமிழக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். புதிய காப்பீடு திட்ட குறைகளை நீக்கி திருத்தப்பட்ட அரசாணை வெளியிட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.