

சென்னை: தவெக ஆட்சியமைக்க இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது ஆதரவை தெரிவிக்க முடிவு செய்துள்ளது.
விசிக செய்தித் தொடர்பாளர் பாவலன், “விஜய்யின் தலைமையில் தவெக ஆட்சி அமைப்பதற்கு சனிக்கிழமை காலை ஆதரவு கடிதம் அனுப்பப்படும்” என்று தகவல் பகிர்ந்துள்ளார்.இதனிடையே, “ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு; இது திருமா காலம் - இனி உயர்வோம் மேலும் மேலும்!” என்று வன்னியரசு ட்வீட் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில், விஜய் ஆட்சியமைக்க மேலும் 6 பேரின் ஆதரவு தேவைப்பட்டது.
ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்த நிலையில், பெரும்பான்மைக்கான பட்டியலை அளிக்குமாறு அவர் கேட்டிருந்தார். இந்த நிலையில் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருந்தது.
இதனையடுத்து இன்று ஆலோசனை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தவெக ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தன.
இந்தச் சூழலில், விசிக தலைவர் திருமாவளவன் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதாக தகவல் பகிரப்பட்டுள்ளது.