சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒரே ஆண்டில் 2.2 லட்சம் ஹெச்.1பி விசா வழங்கி மோசடி
சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒரே ஆண்டில் 2.2 லட்சம் ஹெச்.1பி விசாக்கள் வழங்கப்பட்டதில் மோசடி நடந்திருப்பதாக அமெரிக்க எம்பியும், பொருளாதார நிபுணருமான டேவ் பிராட் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: ஓராண்டில் மொத்தமாகவே 85 ஆயிரம் பேருக்கு தான் ஹெச்.1பி விசா வழங்கவேண்டும் என்ற சட்டவிதிகள் உள்ளன.
ஆனால், இந்தியாவில் உள்ள சென்னையில் இயங்கும் அமெரிக்க தூதரகத்தில் மட்டுமே கடந்த ஆண்டில் 2.20 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டு உள்ளது.
இது அனுமதிக்கப்பட்ட வரம்பைக் காட்டிலும் 2.5 மடங்கு அதிகமாகும். இந்தியாவில் ஹெச்.1பி விசா வழங்குவதன் பின்னணியில் மிகப்பெரிய மோசடியே நடக்கிறது. இதை ஒரு தொழிலாகவே செய்கின்றனர்.
இதேபோல், சென்னை தூதரகத்தில் 2.20 லட்சம் ஹெச்.1பி விசா வழங்கப்பட்டது போலவே ஊழியர்கள் தங்களது துணையை உடன் அழைத்துச் செல்ல 1.40 லட்சம் ஹெச்.4 விசாக்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த மோசடிகள் எப்படி சாத்தியமானது என்பது புரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இதுதொடர்பாக முன்னாள் தூதரக அதிகாரி மஹ்வாஷ் சித்திக் கூறுகையில், “இந்தியாவில் இருந்து வரக்கூடிய 80 சதவீதம் ஹெச்.1பி விசாவின் விண்ணப்பங்கள் போலியானவை. சிலர் நேர்காணலில் கூட கலந்துகொள்ளாமல் மோசடி விசா பெறுகின்றனர்.
இந்தியாவில் மோசடியும், லஞ்சமும் சர்வ சாதாரணமாகிவிட்டது. ஹைதராபாத்தில் இருந்து போலியாக ஹெச்.1பி விசா பெற்றுக் கொடுக்கவே தனித்தனி நெட்வொர்க் இயங்கி வருகின்றன.” என்று தெரிவித்தார்.