

சென்னை: ‘துரந்தர் 2’ திரைப்படத்தின் காட்சிகளை தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான திரைப்படம் ‘துரந்தர் 2’. திரையரங்குகளில் கடந்த 19 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக திரையரங்குகளில் இத்திரைப்படத்தின் காட்சிகளை வெளியிட தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் வழக்கறிஞர் ஷிலா என்பவர் அவசர முறையீடு செய்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில் இப்படத்தில் அரசியல் தொடர்பாகவும், ஒரு கட்சி சார்பான கருத்துகள் அதிகம் வலியுறுத்தப்படுவதாலும் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தேர்தலுக்கு பின் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்தார். இந்த முறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, திரைப்படம் வெளியாகி விட்டது, மனுவாக தாக்கல் செய்து விட்டு முறையீடு செய்யும்படி அறிவுறுத்தினர்.