தஞ்சையில் காவல் நிலைய விசாரணைக்குப் பின் உதயநிதி விடுவிப்பு

தஞ்சையில் காவல் நிலைய விசாரணைக்குப் பின் உதயநிதி விடுவிப்பு
Updated on
1 min read

தஞ்சாவூர்: ‘இரட்டை அர்த்த’ பேச்சு விவகாரத்தில் கைதான சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு போலீஸார் விடுவித்தனர்.

தஞ்சாவூரில் திங்கட்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் பேசினார். அதில், முதல்வர் விஜய் குறித்த அவரது இரட்டை அர்த்தப் பேச்சு சர்ச்சையானதை அடுத்து, இன்று (ஆக.4) காலை தஞ்சாவூர் போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை - நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தஞ்சாவூருக்கு காவல் துறை வாகனம் மூலம் உதயநிதியை விசாரணைக்காக காவல் துறையினர் அழைத்து சென்றனர். அப்போது வழிநெடுகிலும் திமுக தொண்டர்கள் திரண்டு வந்து காவல் துறை வாகனத்தை மறித்தனர். போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சையில் காவல் நிலைய விசாரணைக்குப் பின் உதயநிதி விடுவிப்பு
உதயநிதி கைது: தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் - நடந்தது என்ன?

இந்நிலையில், இன்று மாலை 6.45 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு விசாரணை நடைபெற்ற நிலையில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தொண்டர்கள் உற்சாகம்

உதயநிதி அழைத்து செல்லப்பட்ட காவல் துறை வாகனத்தை பின்தொடர்ந்து அவரது சொந்த வாகனம் (கார்) சென்னையில் இருந்து சென்றது.

இந்நிலையில், விசாரணை நிறைவடைந்த பிறகு, அந்த காரில் அவர் புறப்பட்டார். அப்போது காவல் நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்து, ஆரவாரம் செய்தனர். அதையடுத்து காரின் மேற்கூரையை திறந்து, அதில் நின்றபடி உதயநிதி பயணித்தார்.

அவரது வாகனம் தொண்டர்கள் புடைசூழ மெல்ல நகர்ந்தது. மலர் மாலை, திமுக சால்வை அணிவிக்கப்பட்டது.

நாளை சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் காவல் நிலைய விசாரணையை முடித்த நிலையில், திருச்சி நோக்கி உதயநிதி புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சையில் காவல் நிலைய விசாரணைக்குப் பின் உதயநிதி விடுவிப்பு
உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in