“காவலர்கள் நியமனத்தை தள்ளிவைப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி” - உதயநிதி

“காவலர்கள் நியமனத்தை தள்ளிவைப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி” - உதயநிதி
Updated on
1 min read

சென்னை: “தமிழகத்தில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச் சம்பவங்கள் பெருகி வரும் வேளையில், காவலர்கள் நியமனத்தை மேலும் ஓராண்டுக்கு தள்ளிவைத்திருப்பது இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தமிழகத்தில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச் சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டுதான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. இது, காவல் துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

இதன்மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் - ஒழுங்கையும், காவல் துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு.

எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

“காவலர்கள் நியமனத்தை தள்ளிவைப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி” - உதயநிதி
புதிய மதுபானங்களை அறிமுகப்படுத்தும் முடிவை கைவிட நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in