

சென்னை: மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக திகழ்வதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்ஐ மெட்ராஸ் டையோசீஸ் சார்பில் நடைபெற்ற தடைகளைத் தாண்டிய சாம்பியன்கள் (சாம்பியன்ஸ் பியாண்ட் பேரியர்ஸ்) விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து, சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: மாற்றுத்திறன் குழந்தைகளும், சிறப்பு குழந்தைகளும் தடைகளை உடைத்து உண்மையான சாம்பியன்களாக உருவாகி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து ஏராளமான பாரா தடகள விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.
அதற்கேற்ப மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் இன்றைக்கு தமிழகம் தான் இந்தியாவிலேயே ‘நம்பர் ஒன்’ மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 250 மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.30 கோடிக்கு உயரிய ஊக்கத்தொகை, 500 பேருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க, பல்வேறு சர்வதேச, தேசிய போட்டிகளில் கலந்துகொள்ள தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் மூலம் ரூ.8 கோடி, தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகள், பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த 5 மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின்படி அரசு வேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு 25 மாற்றுத்திறன் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறுவதற்காக, தலா ரூ.1.50 கோடியில் 5 மாவட்டங்களில் சிறப்பு பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் புதிதாக 6 மாவட்டங்களில் பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல் சென்னையிலும், நவீன வசதிகளுடன் கூடிய பாரா பேட்மிண்டன் அகாடமி முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர் பிரியா, மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜோ.அருண், விளையாட்டுத் துறை செயலர் அதுல்யா மிஸ்ரா, மெட்ராஸ் டயோசீஸ் பிஷப் பால் ஃபிரான்சிஸ் ரவிச்சந்திரன், சிஎஸ்ஐ மெட்ராஸ் டையோசீஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.