

சென்னையில் நேற்று நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள். உள்படம்: செந்தில் செல்வன், ராஜேந்திரன்
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக, மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இந்நிலையில், மதிமுகவின் 2 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய மறுத்துள்ளதால் வைகோ அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மதிமுகவின் 32-வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நகரில் நேற்று நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., பொருளாளர் செந்திலதிபன் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்டர் ரொஹையா, பூமிநாதன், ஜீவன், டாக்டர் சி.கிருஷ்ணன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில், 2 எம்எல்ஏக்கள் செந்தில் செல்வன், தி.மு.ராஜேந்திரன் மட்டும் கூட்டத்துக்கு வரவில்லை.
பொதுக்குழுவில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்து, மேகேதாட்டு அணைப் பிரச்சினையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கருத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக வலியுறுத்தினர். அவர்களது விருப்பத்துக்கு இணங்க, கூட்டணியில் இருந்து விலகும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் பாஜகவின் ஆதிக்கம் ஊடுருவக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே, கடந்த 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் உறுதியாக நீடித்தோம்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்க முயன்றதாக பரவலாக செய்திகள் வெளிவந்தன. பரஸ்பரம் எதிர் துருவங்களாக இருந்த இரு கட்சிகளும் இப்படி ஒரு ரகசிய உடன்படிக்கையை மேற்கொண்டது உண்மையாக இருக்குமானால், அதைவிட பெரிய அரசியல் மோசடி வேறு இருக்க முடியாது. இந்த தகவலை அறிந்த உடனேயே திமுக உடனான உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தோம்.
மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில், சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் ஏற்கெனவே திமுகவில் இணைந்துவிட்டார். கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் பொதுக்குழுவில் பங்கேற்காவிட்டாலும், மதிமுகவிலேயே தொடர்வதாக உறுதி அளித்துள்ளார்.
மதிமுகவில் இருந்து வெளியேறிய முன்னாள் துணைப் பொதுச் செயலாளர், என் மீதும், என் மகன் துரை வைகோ மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். முதல்வர் விஜய்யிடம் நான் ரூ.50 கோடி வாங்கியதாகவும், சென்னை ஓஎம்ஆர், அண்ணா சாலையில் பிரம்மாண்ட கட்டிடங்களை வாங்கியுள்ளதாகவும் கூறப்படும் புகார்கள் முற்றிலும் பொய்யானவை.
இந்த பழிச்சொற்களுக்குப் பின்னால் இருந்து யாரோ ஒரு சிலர் அவரை இயக்குகின்றனர். எனவே, இதுதொடர்பான செய்தியை வெளியிட்ட நாளிதழ் மற்றும் புகார் கூறிய நபர் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நாங்கள், முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம். வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெகவை ஆதரிப்போம்.
உள்ளாட்சித் தேர்தலிலும் தவெகவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. தவெக ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் இருமொழிக் கொள்கையில் அவர்கள் உறுதியாக உள்ளனர். அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றி வருவதால், தவெக அரசின் செயல்பாடுகள் எங்களுக்கு திருப்தி அளிக்கின்றன.
எங்கள் கட்சி எம்எல்ஏவை திமுக தன் பக்கம் இழுத்திருப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல. இதை ‘குதிரை பேரம்’ என்று சொல்வதா, ‘ஒட்டக பேரம்’ என்று சொல்வதா எனத் தெரியவில்லை. மேலும், எங்களது 2 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தால், அவர்களுக்கு ஆதரவாக இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என விஜய் கூறியிருந்தார். ஆனால், எதிர்வரும் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவின் 2 எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வைகோ மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: தொகுதி மக்கள் நாள்தோறும் என்னிடம் வெளிப்படுத்தி வரும் உணர்வை மதித்தும், தலைவர் வைகோ மீதோ, எம்எல்ஏவான என் மீதோ களங்கம் படர்வதைத் தவிர்க்கும் பொருட்டும் பதவி விலகல் என்ற முடிவை தலைமை இப்போது மேற்கொள்ள வேண்டாம். குறைந்தபட்சம் 6 மாதம் பொறுத்திருப்போம். கூட்டணி குறித்து தாங்களும், கட்சியும் எடுக்கும் முடிவை மதிக்கிறேன். எனவே, பதவி விலகல் தொடர்பாக வைகோவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவை, என்னால் செயல்படுத்த இயலாது. அதனால், பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.