வேல்முருகன்

வேல்முருகன்

திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகல் - வேல்முருகன் அறிவிப்பு

Published on

சென்னை: திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தவாக தலைவர் வேல்முருகன், “2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இடம்பெற்று மதசார்பற்ற சக்திகளோடு கூட்டணியில் பயணித்து வந்தோம். இந்தச் சூழலில் திமுக பேச்சு வார்த்தைக்குழுவுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டோம். அதில் எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்குவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நாங்கள் ஒரு இடத்தை எங்களால் ஏற்க முடியாது என்றும், கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தோம். மேலும், தமிழக மக்களின் நலனுக்கான திமுக அரசிடம் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். எங்கள் கோரிக்கைகளை அரசு பொருட்படுத்தவில்லை. இதனால் திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகுகிறது.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்ததை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் பெரியண்ணன் மனநிலையில், திமுக எங்களை புறக்கணித்தது. அதேபோல, நான் திமுக கூட்டணியில் இருப்பதை தமிழரல்லாத, தமிழர் விரோத அதிகாரிகள் விரும்பவில்லை. எனவே என்னை திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்ற அவர்கள் திட்டமிட்டனர். இதனால் தமிழர் விரோத அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு திமுக தலைமை தவாகவை புறக்கணித்துள்ளது.

சமூக நீதி இயக்கமான திமுக ஏன் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மறுக்கிறது. வன்னியர்களுக்காக 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையை தடுத்த சக்தி எது?. தமிழக வேலை தமிழருக்கே என்ற சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றாதது ஏன்?. தமிழ் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பது இன்னும் இங்கே சட்டமாகவில்லை.

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக உள்ள சக்திகள் முதல்வர் ஸ்டாலினை சுயமாக சிந்தித்து முடிவெடுக்க விடாமல் மறுத்து, அதிகாரிகள் கொட்டமடிக்கிறார்கள் என நான் சொன்ன குற்றச்சாட்டுகளால் இப்போது தேர்தல் களத்திலும் எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

தவாக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், தமிழக வாழ்வுரிமை கட்சி, திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கிறேன். எங்களின் 10 அம்ச கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்.

அதேபோல், நாட்டை மதத்தின் பெயரால் பிளவுப்படுத்தும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தவாக இடம்பெறாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.எனவே எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். 25க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் எங்களுடன் ஆலோசித்து வருகின்றன. அவர்களின் கருத்தை கேட்டு கூட்டணி குறித்து முடிவெடுப்போம்” என்றார்.

<div class="paragraphs"><p>வேல்முருகன்</p></div>
ராமதாஸ் - சசிகலா கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ‘அதிர்ச்சி’... ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in