

சென்னை: முதல்வராக விஜய்-க்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி, ஆளுநர் மாளிகை வெளியே பதாகை ஏந்தி தவெக-வினர் போராட்டம் நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க போதிய இடங்கள் தவெகவுக்கு கிடைக்கவில்லை.
எனினும், 108 எம்எல்ஏ-க்கள் மற்றும் காங்கிரஸ் 5 எம்எல்ஏ-க்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம், விஜய் உரிமை கோரினார். ஆனால், ஆட்சி அமைப்பதற்கான 118 எம்எல்ஏ-க்களின் பட்டியலை ஆளுநர் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால், முதல்வர் பதவி ஏற்பு விழா திட்டமிட்டபடி நடைபெறவில்லை. மேலும், திமுக, அதிமுக தனித்தனியாக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது.
இதற்கிடையே, திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற இரு கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகளின் ஆதரவை தவெக கோரி உள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வராக விஜய்க்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என தவெக-வினர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வெளியே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.