தவெக முன்னாள், இந்நாள் நிர்வாகிகளிடையே மோதல்
சென்னை: தவெக முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு சாலையில் உருண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வளசரவாக்கம் 152-வது வார்டு பெத்தானியா நகரை சேர்ந்தவர் சமீர். இவர் கடந்த 16-ம் தேதி தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இவருடன் 10-க்கும் மேற்பட்டோர் தவெக உறுப்பினர் படிவம், அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கிழித்தும், படிவங்களை எரித்தும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் சமீர் தவெக பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சமீருக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சமீர் மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தவெக நிர்வாகிகள் சிலர் சமீர் வீட்டின் அருகே சென்று தகராறு செய்தனர். இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டு சாலையில் படுத்து உருண்டனர்.
இதைக் கண்ட சமீர் வீட்டின் உரிமையாளர் ரமேஷ் (51) சண்டையைத் தடுக்க முயன்றபோது அவரும் தாக்கப்பட்டார். இதில் மூக்கு உடைந்து ரத்தம் வடிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் வளசரவாக்கம் போலீஸாருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
