

டிடிவி தினகரன் | கோப்புப் படம்
மதுரை: “அதிமுகவை மகன், மைத்துனர், சகலை என குடும்பக் கட்சியாக, வட்டாரக் கட்சியாக பழனிசாமி மாற்றியுள்ளார்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “எங்களுடன் கூட்டணி குறித்து சில கட்சிகள் பேசிக் கொண்டிருக்கின்றன. இது குறித்து உரிய முடிவு எடுத்த பின்னர், கூட்டணி குறித்து முறைப்படி தெரிவிக்கப்படும். துரோகத்தின் நோபல் பரிசு பெறத் தகுதி உடையவர் பழனிசாமி. 2017 முதல் அவர் செய்த துரோகங்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர் செய்த துரோகங்களுக்கு 2026 தேர்தலில் இறுதித் தீர்ப்பு எழுதப்படும்.
2017 பிப்ரவரியில் அதிமுக 18 எம்எல்ஏக்களை, அந்தத் தொகுதி மக்களிடம் சொல்லிவிட்டுத்தான் அவர்களை தகுதி நீக்கம் செய்தாரா? அதிமுகவின் அடிப்படை சட்டவிதிகளை பொதுக்குழு என்ற பெயரில் மாற்றினாரே... இதெல்லாம் அதிமுக தொண்டர்களிடம் கேட்டுத்தான் மாற்றினாரா? இவ்வாறு இருக்க, செங்கோட்டையன் ராஜினாமா செய்தது குறித்து பழனிசாமி கேள்வி எழுப்புகிறார்.
இரட்டை இலை சின்னத்தை வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக, பணத் திமிறில், பதவி வெறியில் பேசிக் கொண்டிருக்கும் பழனிசாமிக்கு இந்தத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவர். அதிமுகவை மகன், மைத்துனர், சகலை என குடும்பக் கட்சியாக, வட்டாரக் கட்சியாக பழனிசாமி மாற்றியுள்ளார். தொண்டர்கள் தூங்குவது போன்று இருந்தாலும், தேர்தலுக்குப் பின்னர் விழித்துக் கொள்வர். பாஜக கூட்டணிக்கு யாரும் என்னை அழைக்கவில்லை” என்று கூறினார்.